புதுடில்லி, மே 23 மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் சிலர் ஓய்வு பெறுவதாலும், பதவி விலகிய செய்ததாலும் காலியாகும் 26 இடங்களுக்கு அடுத்த மாதம் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவையில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் ஜூன் 21-ஆம் முதல் ஜூலை 19-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வுபெறுகின்றனர். இவர்களில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.
இதனால் ஆந்திரா, குஜராத், கருநாடகா ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும், ஜார்கண்ட்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரமில் தலா ஒரு இடங்களுக்கும் ஜூன்18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
இத்துடன், மகாராட்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஓர் இடங்களுக்கான இடைத் தேர்தலும் நடைபெறும். மகாராட்டிரா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுனேத்ராபவார், தனது பதவி விலகிவிட்டு துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகியுள்ளார். இதனால், மேற்கண்ட 2 இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 8-ஆம் தேதி கடைசி நாள். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10 நாட்களில் 3ஆவது முறையாக பெட்ரோல், டீசல்
விலை உயர்வு!
சென்னை, மே 23 பொதுமக்களை மேலும் வறுத்தெடுக்கும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இந்த புதிய விலை உயர்வின்படி, பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்றைய புதிய விலை நிலவரம்:
பெட்ரோல்: ரூ. 105.36 டீசல்: ரூ. 97.02 தொடர்ந்து ஏறி வரும் இந்த விலை உயர்வு, வாகன ஓட்டிகள் மத்தியிலும் சாமானிய மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலை கிலோவுக்கு மேலும் 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பன்னாட்டு சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எரிபொருட்களின் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வரும் சூழலில், இந்த அதிரடி விலை உயர்வு அறிவிப்பு வெளி யாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 10 நாட்களில் மட்டும் சிஎன்ஜி விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் பெட்ரோல், டீசலை விடக் குறைவான செலவு என்பதால் அண்மைக்காலமாக கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிஎன்ஜி வாகனங்களைப் பயன்படுத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது. “தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டால், சிஎன்ஜி வாகனங்களை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் நடுத்தர மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்,” என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் தொடர் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவும், அதன் விளைவாகப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
