கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மே. 23- கலைஞர் மகளிர் உதவித் தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக, 29-ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

 உரிமைத்தொகை திட்டம்

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தகுதியான 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் பணி தொடங்கியது.

விடுபட்டவர்களுக்கு..

அதன்பின்னர், விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் இ-சேவை மய்யம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட் டன. அதில் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.  இந்த உரிமைத்தொகை, ரேசன் கார்டில் உள்ள குடும்பத்தலைவிக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெறமுடியவில்லை.

29-ஆம் தேதி முதல்…

எனவே தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் வருகிற 29-ஆம் தேதி முதல் இந்த உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பெண்களிடம் இருந்து பெறப் படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை, மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கான முகாம் தமிழ்நாடு முழுவதும் 29-ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு வருமானம்

கலைஞர் உரிமைத்தொகை பெற வேண்டுமென்றால் அரசு சில  தகுதிகளை வைத்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், அய்ந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் ஆகியோருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும். இந்த விதிமுறைகளில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என்பதனை ரூ.3 லட்சம் அல்லது ரூ.4 லட்சம் உயர்த்தலாமா? என்றும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒருவேளை இது உயர்த்தப்படும் பட்சத்தில் அதிகளவில் பெண்கள் பலன் பெறுவார்கள்.

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *