தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று வெளியிடுகிறார்
சென்னை,பிப்.20- மேனாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரே ஒருமுறை சிங்கப்பூருக்கு 1999ஆம் ஆண்டு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டார்.
அந்தப் பயணம் குறித்த தகவல்கள், செய்திக் குறிப்புகள், தலையங்கங்கள், புகைப்படங்கள், உரையாற்றிய பேச்சு, நடத்திய சந்திப்புகள் எனப் பல்வேறு தகவல்களை ஆவணப்படுத்தும் நூல் சென்னையில் எதிர்வரும் 22.2.2024 வெளியீடு காணவுள்ளது.
சென்னை மயிலாப்பூர், சிஅய்டி காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.
‘செம்மொழி’ சமூக, இலக்கிய இதழின் ஆசிரியரும் சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள இந்நூலை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையேற்று வெளியிடுகிறார்.
நூலைப் பெற்றுக்கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் M.A.Ex M.P ; மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா M.P ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
<<<
கலைஞரின் சிங்கப்பூர் வருகையின்போது சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழில் பணியாற்றிவந்த இன்றைய தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கலைஞரின் மகள் கவிஞர் கனிமொழி கருணாநிதி MP கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி (1.9.2024) சிங்கப்பூரில் இந்நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் என்பது நினைவு கூரத்தக்கது.
<<<
சிங்கப்பூரின் அன்றைய தொடர்பு, கலைகள் அமைச்சராகவும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சராகவும் பொறுப்புவகித்த பிரிகேடியர் ஜெனரல் ஜார்ஜ் இயோவின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், அன்றைய பிரதமர் கோ சோக் டோங் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளை இந்த மூன்று நாள் வருகையின்போது மேற்கொண்டார்.
<<<
தமிழ் அலை பதிப்பகம் மற்றும் செம்மொழி சமூக இலக்கிய இதழின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சிற்றுண்டியுடன் தொடங்கும். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.
விழா ஏற்பாட்டுக்குழுவினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.