அய்தராபாத், பிப். 8- அய்த ராபாத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வரி விலக்கு பெறு வதற்காக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
அய்தராபாத் நகரில் பணி புரியக்கூடிய பல்வேறு அய்டி ஊழியர்களும் தங்களுடைய வருமான வரி கணக்கில் அரசி யல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததாக கூறி வரி விலக்கு பெற்றுள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இது ஒரு மோசடி என்பது கண்டறியப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80GCC இன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளை குறிப்பிட்டு வருமான வரி விலக்கு பெற முடியும்.
அய்தராபாத்தை சேர்ந்த அய்டி தொழில் வல்லுநர்கள் பலரும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக மோசடி செய்து 110 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி 36 நிறுவனங்களில் பணி புரியக்கூடிய அய்டி ஊழியர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடையே வழங்காமல் போலியாக கணக்கு காட்டி உள்ளனர்.
ஒரு அய்டி ஊழியரின் ஆண்டு ஊதியமே 46 லட்சம் ரூபாய் தான், ஆனால் அவர் ஒரு அரசியல் கட்சிக்கு 45 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதாக போலியாக கணக்கு காட்டி உள்ளார்.
அய்டி ஊழியர்கள்
அய்டி ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கு காசோலை மற்றும் வங்கி பணப்பரிமாற்றம் வழிமுறைகளில் பணத்தை அனுப்புகின்றனர். பதிவு செய்யப் படாத அரசியல் கட்சிகளுக்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டு வருமான வரியில் கணக்கு காட்டி வரிவிலக்கு பெறுகின்றனர். வரி விலக்கு பெற்ற பிறகு அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகை இந்த ஊழியர்களுக்கு திரும்ப வழங்கி விடுகிறார்கள்.
மோசடி
இவ்வாறு பல்வேறு அய்டி ஊழியர்கள் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இதற்கு முன்பு வீட்டு வாடகை மற்றும் கல்விக் கடன், வீட்டு கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றில் மோசடியாக கணக்கு காட்டி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசு ஊழியர்கள் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த மோசடியை தொடர்ந்து தற்போது தனியார் அய்டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இதுபோல வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு போலியாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் குஜராத், தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு நன்கொடைகளை பெற்ற கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர் களுக்கெல்லாம் மீண்டும் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதிலும் மோசடி செய்தால் அவர்களுக்கு 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
கட்சிகளுக்கு நன்கொடை
ஒரு அய்டி நிறுவனத்தில் 430 ஊழியர்கள் இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக 17.8 கோடி ரூபாயை வரி ஏய்ப்பு செய்துள்ளனர். ஒவ்வொரு ஊழியரும் 4 லட்சம் ரூபாயை அரசியல் கட்சிக்கு வழங்கியதாக கணக்கு காட்டி இருந்தனர். இவ்வாறு அனைத்து அய்டி நிறுவனங்களிலும் ஊழியர்கள் அரசியல் கட்சி களுக்கு நன்கொடை என குறிப் பிடப்பட்டிருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர் அப்போது தான் இந்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.