புதுடில்லி, மே 12 பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் பிணை (ஜாமீன்) மனுக்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, பிணை வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க எட்டு கட்டளைகள் அடங்கிய உத்தரவை பிறப்பித்தது.
நீதிமன்ற நிர்வாகத்தை முறைப் படுத்தவும், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன: பிணை மனுக்களை விசாரித்து முடிக்க ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். பிணை மனுக்களை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயம் விசாரணைப் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒருவேளை விசாரணைக்கு வராத மனுக்கள், தானாகவே அடுத்த பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
வழக்கின் முதற்கட்ட விசா ரணை தொடங்கும் முன்பே நிலை அறிக்கையை (Status Report) தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மனுவின் நகல்களை முன்கூட்டியே அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகத் திற்கு வழங்க வேண்டும்.
தடய அறிவியல் அறிக்கை
தடய அறிவியல் ஆய்வக (FSL) அறிக்கைகள் தாமதமாவதால் பிணை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனைச் சரிசெய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை அமைப்புகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் சில முக்கிய அவதானிப்புகளை முன்வைத்துள்ளனர்:
“புலனாய்வு அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கு, குற்றம் சாட்டப் பட்டவர்கள் எளிதில் பிணை பெற வழிவகுத்துவிடும். எனவே, அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதே வேளையில், எந்தச் சூழலிலும் யாருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது.”
நீண்ட கால சிறைவாசம் மற்றும் விசாரணை தாமதம் ஆகியவை ஒருவரின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் என்பதால், இந்த புதிய வழிகாட்டுதல்கள் நீதித்துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஜாமீன் மனுக்கள் தேக்கமடைவது குறைக்கப்பட்டு, நீதி பரிபாலனம் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
