தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

viduthalai
17 Min Read

92 வயதில் 82 ஆண்டு பொது வாழ்வு ஆசிரியருக்கு மட்டுமே உண்டு – கலி.பூங்குன்றன்
அன்றாடம் எழுதுவது – பேசுவது – ஆசிரியருக்கே உரித்தான தனிச்சிறப்பு –பேராசிரியர் சுந்தரவள்ளி
உங்கள் வாழ்வில் வாழ்வின் பாடம் இருக்கிறது – வினோபிரியா (அமெரிக்கா)
மதவாத சக்தி பற்றி 1989லேயே எச்சரித்த தலைவர் ஆசிரியர் – பீட்டர் அல்போன்ஸ்
92 வயதில் இங்கு வந்த நான் 29 வயது இளைஞனாக திரும்புகிறேன் -தமிழர் தலைவர் ஆசிரியர்
மகிழ்ச்சியோடு, கொள்கை உணர்ச்சியோடு குதூகலித்த தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா

சென்னை, டிச. 8- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் எழுச்சியோடும் கொள்கை உணர்வோடும் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 18), The Modern Rationalist Annual Number 2024 ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 07.12.2024 அன்று காலை நடைபெற்றது.
நிகழ்வில் வருகை தந்த அனைவரையும் வரவேற்று கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி வரவேற்புரை ஆற்றினார்.

92 ஆண்டுகளில் 82 ஆண்டுகள்
பொது வாழ்வுக்கு சொந்தக்காரர்!

பொது வாழ்வில் 51 ஆண்டுகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் பயணிக்கும் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.

அவரது உரையில், அனைவரும் எழுந்து நின்று ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்வு டன் தெரிவிக்க வேண்டும் என்று அரங்கம் நிறைந்த கரவொலியுடன் தலைமை உரையைத் தொடங்கினார். 92 ஆண்டுகளில் 82 ஆண்டுகள் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர் நமது ஆசிரியர் என்றும், டிசம்பர் 7 இன்னுமொரு சிறப்புக்குரிய நாள், 1958 ஆம் ஆண்டு இதே நாளில்தான் ஆசிரியருக்கும் மோகனா அம்மையார் அவர்களுக்கும் திருமணம் நடந்தது என்ற மகிழ்ச்சிக்குரிய செய்தியை பதிவு செய்து, ஆசிரியரை பாதுகாத்து, அவரின் பயணத்திற்கு உறுதுணையாக இருந்து, நமக்கெல்லாம் பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அம்மையார் மோகனா வீரமணி அவர்களை மேடைக்கு அழைத்து கழகத்தின் துணைத் தலைவர், ஆசிரியர்- மோகனா அம்மையார் இருவருக்கும் பயனாடை அணிவித்து, அனைவரின் சார்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் தான் பெரியார் திடல் வருகை தந்து 51 ஆண்டுகள் ஆகின்றது என்றும், ஆசிரியர் காலத்தில் நாம் அடைந்த வளர்ச்சியின் அடையாளம் தான், குடும்பம் குடும்பமாக வருகை தந்து ஆசிரியருக்கு அனைவரும் வாழ்த்து கூறியதை பெரு மகிழ்வுடன் பதிவு செய்தார். இந்த இயக்கத்திற்கு வந்தால் என்ன கிடைக்கும் என்று ஆசிரியரிடம் கேட்டால் சிறைச்சாலை தான் கிடைக்கும் என்பார்; நம்முடைய அழைப்பு எதற்காக இருந்திருக்கிறது? போராட்டத்திற்காக தான் இருந்திருக்கிறது. இவை அனைத்தும் தெரிந்தும், இந்த இயக்கம் இவ்வளவு வலுவுடன் இருக்கிறது என்றார். கழகத்தின் செயல்பாடு என்பது இரண்டு தான். ஒன்று பிரச்சாரம்; மற்றொன்று போராட்டங்கள். அதனை ஏற்றுக்கொண்டு எந்த எதிர்ப்பார்ப்புமின்றி இயக்கத்தில் பயணிப்பதற்கு ஆசிரியர் கூறுவது போல் நம் முதுகை நாமே தட்டிக் கொள்ள வேண்டும் என்றார்.

தந்தை பெரியாரின் கொள்கை என்பது கடவுள் மறுப்பு என்பதாக சுருக்க பார்க்கிறார்கள். உண்மையில் தந்தை பெரியாரின் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை (way of life). கடவுள் மறுப்பின் மூலம் நமது அறிவும் தன்னம்பிக்கையும் காப்பாற்றப்பட்டிருக்கிறது; காலமும் நேரமும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்று அதற்கான காரணங்களை விவரித்தார். மிக முக்கியமாக இந்த கொள்கையால் நமது பொருளாதாரம் வீணாகாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றார். ஆசிரியரின் வரிகள் அனைத்தும் நமது வாழ்க்கையை எப்படி மேம்படுத்துகிறது என்பதற்கு சான்றாக பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் தீமையை ஆசிரியர் எழுதிய உடனே, தான் பரோட்டா சாப்பிடுவதை நிறுத்தியதை வாழ்வியல் எடுத்துக்காட்டாக கூறினார்.

கி.வீரமணி, திராவிடர் கழகம், வாழ்த்து

தந்தை பெரியாருக்கு பின் இந்த இயக்கம் இருக்குமா என்ற சிலர் வருத்தத்துடனும், இருக்கக்கூடாது என்றும் சிலர் ஆசையுடனும் எதிர்பார்த்தனர். அய்யாவுக்கு பின் இந்த இயக்கம் இருக்கிறது, வலிமையுடன் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் என்றார்.

பெரியார் திடல் அடைந்துள்ள மேம்பாட்டினையும், கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ள வளர்ச்சியுமே அதற்கு பெரிய சான்று. அய்யா காலத்தில் இடஒதுக்கீடு 49 சதவீதமாக இருந்தது, ஆசிரியரால் அது 69 சதவீதமாக ஆனது என்றும், சமூகநீதி பயணத்தில் மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த ஆசிரியர் கண்ட களங்களையும், இயக்கம் கண்ட 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் விளக்கினார். மேலும், பி.பி. மண்டல், சமூகநீதி காவலர் வி.பி.சிங் ஆகியோர் ஆசிரியரின் சமூகநீதி உணர்வு குறித்து பதிவு செய்த செய்திகளை குறிப்புகளுடன் விளக்கினார். தந்தை பெரியார் என்ன காரணத்திற்காக காங்கிரசில் இருந்து வெளியேறினாரோ, அந்த காங்கிரசின் இன்றைய இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இடஒதுக்கீடு அளவை 50 சதவீதம் மேல் உயர்த்த வேண்டும் என்கிறார். இதுதான் பெரியார் கொள்கையின் வெற்றி என்றார். இது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, சிந்து சமவெளி திராவிட நாகரிகம் நூற்றாண்டு, வைக்கம் நூற்றாண்டு அதில் ஆசிரியர் 92 என்று கூறி, வைக்கத்தில் டிசம்பர் 12 அன்று நடக்க இருக்கும் ‘வைக்கம் நூற்றாண்டு விழா’ பற்றி குறிபிட்டார்.

கி.வீரமணி, திராவிடர் கழகம், வாழ்த்து

அரசியல் போராட்டம் அல்ல;
ஆரிய- திராவிட போராட்டம்!

தந்தை பெரியார் குறிப்பிட்டது போல் நாட்டில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல; ஆரிய- திராவிட போராட்டம் தான் என்றார். சினிமாக்காரர்கள் அரசியல் பேசுவது. ‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’ என்று அய்யா சொல்வது போல் நடந்துவிட்டது என்றார். திராவிட மாடல் ஆட்சியை ஒழிப்பேன் என்று நேரடியாக கூறிய பிறகும், நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேள்வியை எழுப்பி, எதற்காக திராவிட மாடலை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்? பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக முதலமைச்சர் அறிவித்ததற்காகவா? எங்கள் பாதையை தீர்மானிப்பது பெரியார் திடலும் தமிழர் தலைவர் ஆசிரியரும் என்றாரே, கருஞ்சட்டை பட்டாளம் இருக்கின்ற வரை திராவிட மாடலை ஒழிக்க முடியாது என்றார்.

அடுத்து நம் பணியில் இது போன்ற நபர்களை அம்பலப்படுத்துவதும் மிக முக்கியம் என்றும், பிஜேபி எதிர்ப்பை பேசாமல், மதவாதம் பற்றி பேசாமல் இருக்கும் இவர்களை அம்பலப்படுத்தினார். ஒரே தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள். திராவிட மாடல் ஆட்சியை அடுத்த தேர்தலிலும் வெற்றியடைய செய்ய உழைப்போம் என்றும், இதனை துணிந்து பேச வேண்டும் என்றார். கொள்கையை உரக்க பேசுவதால் தோற்று போக மாட்டோம். அதற்கு 1971 தேர்தலும், சேலத்தில் நடந்த நிகழ்வும், அதற்கு பிறகு திமுக கண்ட வெற்றியையும் பதிவு செய்தார். ஒரு காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே பெரியார் இயக்கத்தில் இருப்பார்கள் என்று கூறிய நிலை மாறி, இன்று இளைஞர்களின் பாசறையாக நம் இயக்கம் இருக்கிறது என்றார்.

நிறைவாக , தந்தை பெரியார் 1937 ஆம் ஆண்டு ‘நவமணி’யில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி, அதில் அய்யா ‘‘எனக்கு ஒரு சமயம் குறை ஏற்பட்டாலும், சுயமரியாதை கொள்கைக்கு ஏற்படாது’’ என்று கூறியதை விளக்கி, இயக்கம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது, இயங்கிக் கொண்டே இருப்போம் என்று எடுத்துரைத்து, ஆசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையும் இதே மேடையில் கொண்டாடுவோம் என்று உணர்ச்சிகரமாக நிறைவு செய்தார்.

நூல்கள் வெளியீடு

ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 18), The Modern Rationalist Annual Number 2024 ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

நீர் மானுடத்திற்கே ஆசிரியர்!

நிகழ்வில், பெரியார் பன்னாட்டு அமைப்பை சார்ந்த தோழர் வினோபிரியா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் தான் நமக்கு பெருமை என்றும், இந்த நிகழ்வில் பேசுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக கூறி ஆசிரியருக்கு கீழ்க்கண்ட தனது கவிதையின் மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

தொண்டு செய்து பழுத்த பழம்
நம் தந்தை பெரியார்
அந்த விதையில் வந்த
ஆலமரம் நம் ஆசிரியர்
‘‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை” என்றார் மாவோ
ஓய்வை விரும்பாத
ஓய்வை அறியாத ஆலமரம்
நம் ஆசிரியர்
இங்கு காற்றுக்கும்
எப்போதும் பஞ்சமில்லை
இப்போது வீச தொடங்குவதோ
புதிய குலக்கல்வித் திட்டம்
காற்றை கட்டிப்போடும்
நம் ஆலமரம்
ஆசு என்றால் அறியாமை
இரியர் என்றால் இருளை அகற்றுபவர்
அறியாமை என்ற இருளை
விடுதலை மூலம்
தினம் தினம் அகற்றுவதால்
நீர் மானுடத்திற்கே
ஆசிரியர்!
பெரியாரின் அரிச்சுவட்டில்
சமூக நீதி நிலைநாட்டி
பகை தகர்த்திட
இடர் துடைத்திட
பகுத்தறிவுப் பகலவனின்
ஒளியாய் திகழ்பவரே!
சொந்த புத்திக்கும்
பெரியார் தந்த புத்திக்கும்
விளக்கமே உந்தம் வாழ்வியல்.
ஓய்வென்பது உங்களைப் பொறுத்தவகையில் துரு
உம் உழைப்பே எங்களுக்கெல்லாம் எரு!
உங்கள் பயணம் தொடரட்டும்!
உள்ளத்தின் தூய்மை சிந்தனையில் வைத்து,
எண்ணத்தின் தூய்மை நன்னயத்தில் தைத்து,
கற்றலில் நுட்பமாய் செழித்து,
கேள்விகளால் உலகத்தைத் தெளித்து,
பேரறிவின் மிசையில் திராவிடம் பதித்து,
உங்கள் வழியில் வாழ்வின் பாடம்!
நெறியாய் நிலைத்திட உங்கள் நற்செயல்கள்,
நாளும் வாழ்க!

ஆசிரியரிடம் கற்ற துணிச்சல்!

வாழ்வில் சிந்தனைகள் (தொகுதி18) நூலினை வெளி யிட்டு சிறப்புரை வழங்கினார் பேராசிரியர் சுந்தரவள்ளி அவர்கள்.
அவரது உரையில்,

ஆசிரியரின் பிறந்த நாளை தங்களின் வீட்டு விழாவாக எண்ணி கொண்டாடும் தோழர்களை பார்க்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், அடுத்த தலைமுறைகளுக்கு வாழ்நாள் வழிகாட்டியாக வாழும் ஆசிரியர் அவர்கள் தமிழ் போல் வாழ வேண்டும் என்று தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்தார். என்னைப் போன்ற பெண்கள் வெடிகுண்டு போல் இருக்கிறோம் என்றால் அதனுள் இருக்கும் கருப்பொருளாக பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் இருக்கிறார்கள் என்றார். பெரியாரிய இயக்கம் மிகத் தெளிவாக அடியெடுத்து வைக்கிறது. அதற்கான சான்றுதான், தான் போகும் இடமெல்லாம் கருஞ்சட்டை தோழர்கள் நிச்சயம் இருக்கின்றனர். குறிப்பாக, குவைத் தாராவி போன்ற பகுதிகளுக்கு சென்றபோது பெரியாரிய தோழர்கள் தன்னை வரவேற்ற விதத்தை பற்றி மகிழ்வுடன் பதிவு செய்தார். ஆசிரியரின் வாழ்வியல் வழிகாட்டுதல் எப்படி இருக்கிறது என்பதை தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசினார். தான் நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்கு தனியாக சென்று மருத்துவமனையில் பார்த்தபோது, அறிவியலை தான் நம்ப வேண்டும் என்ற துணிச்சலுக்கும் உறுதிக்கும் காரணம், ஆசிரியரிடம் தான் கற்ற துணிச்சல் என்றார். அன்றாடம் ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கிறார் என்றால் அது எவ்வளவு ஆச்சரி யத்திற்குரிய செய்தி என்றும், அதிலும் வாழ்வியல் சிந்தனைகளில் 18 தொகுதிகளை எழுதி முடித்திருக்கிறார்; தொடர்ந்து எழுதுகிறார் என்றால் மிகுந்த வியப்புக்குரியது என்றார்.

இந்நூலில் எழுதப்பட்டுள்ள செய்திகள் தனக்கா கவே எழுதப்பட்டுள்ளது போல் இருக்கிறது என்றும், பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல் பெண்கள் துணிச்ச லோடு இருக்க வேண்டும் போன்றவற்றை பேசும் புத்தகமாக இது இருக்கிறது என்றார். ஆழமாக வாசித்து புரிந்து கொள்ள வேண்டிய பல கட்டுரைகளில் முதல் கட்டுரை தன்னை வெகுவாக ஈர்த்தது என்றும், ஊருக்குள் ஒரு குடி என்ற நூலினை வாசித்து துணி துவைக்கும் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தையின் மன வேதனையை பற்றியும், அதிலிருந்து கல்வியின் மூலம் அவர் பெற்ற வளர்ச்சியையும் உணர்ச்சிகரமாக ஆசிரியர் பதிவு செய்த விதத்தை எடுத்துரைத்தார். ஒருவர் சிறுநூலை தந்தால், அது என்ன என்று பார்க்காமல் யார் கொடுத்தாலும் அது சிறிய நூலா பெரிய நூலா என்பதை தாண்டி, அதில் உள்ள செய்திகள் முக்கியமென்று வாசிக்கும் பழக்கம் ஆசிரியர் இடத்தில் இருப்பது ஆச்சரியத்தை தந்ததாக கூறினார். பொதுவாக உண்மையைப் பேசுவது கடினமான காரியம். அந்த இயல்பைப் புரிந்து கொண்டு தான், ஆசிரியர் அவர்கள் ‘கூடுமானவரை உண்மையைப் பேசுங்கள்’ என்ற வரியை பயன்படுத்தி இருக்கிறார். இப்படி ஒரு எளிமையான, இயல்பான செய்திகளை கூறி ‘உன்னால முடியும், நீ வா!’ என்று முதுகில் தட்டிக் கொடுப்பது பெரியாருக்கும் ஆசிரியருக்கும் உரிய சிறப்பு. தந்தையின் இடத்தில் இருந்து அவர்கள் அதை செய்கிறார்கள் என்றார்.

பொய்யை மட்டுமே பேசும் சங்கி கூட்டத்திற்கு, கூடுமானவரை உண்மையை பேசுங்கள் என்று அறி வுரையாக அந்த கட்டுரையை எடுத்துக் கொள்வதாக கூறி னார். களத்தில் நின்று அனைத்தையும் எதிர்கொள்வதற்கு பெண்கள் தயாராக இருக்கிறார்கள் என்று, பெண்களையும் சேர்த்து களத்தில் நிற்பது தான் பெரியார் இயக்கம். அதிலும் குடும்பம் குடும்பமாக நிற்கின்ற இயக்கம். பெண்களை மலர், பூ, கொடி, இலை என்று மென்மையாக பார்க்கும் சமூகத்தில், களத்திற்கு வாருங்கள் என்று பெண்களை அழைத்தது பெரியாரிய இயக்கம். அதை நினைவூட்டும் விதத்தில் கேரளா வயநாடு நிலச்சரிவின் போது துணிச்சலோடு நின்ற செவிலியர் சபீனாவை பற்றி ஆசிரியர் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். இப்படியாக பெரியாரிய சிந்தனைகள் தமிழ்நாட்டில் வேராகி நிற்பதற்கு அடிப்படையான, பெண்ணுரிமை சார்ந்த கருத்துக்களை ஆசிரியர் எழுதியிருக்கக் கூடிய விதத்தை கூறினார். எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பெரியாரிய தோழர்கள், எந்த இயக்கத்தையும் சாராமல் தந்தை பெரியாரைத் தேடி வந்தவர்களை பார்க்கிறேன் என்றும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்புச் சட்டையுடன் இருக்கிறார்கள் என்றார். எதற்காக பெரியார் இந்த பணியை ஆசிரியரிடம் ஒப்படைத்தாரோ, அந்த ஆலமரத்தை காப்பாற்றி, இன்றைக்கு காடு போல் அது வளர்ந்து நிற்பதற்கு காரணமாக ஆசிரியர் இருக்கிறார் என்றும், இந்த நூலின் மூலம் நம்முடைய வாழ்வியலை எளிமையாக்கி தந்திருக்கிறார்.

தூங்குவது, நேரத்திற்கு உணவு சாப்பிடுவது, பிரச்சனைகளை எதிர்கொள்வது, எதுவாக இருந்தாலும் துணிச்சலுடன் பெண்கள் நடப்பது போன்ற செய்திகள் உற்சாகத்தை தருவதாகவும், தானும் எழுத வேண்டும் என்ற முடிவை இந்நூலின் மூலம் ஆசிரியரைப் பார்த்து உறுதி ஏற்று இருக்கிறேன் என்று கூறி, ஆசிரியரின் பயணத்தில் அவரோடு கைகோர்ப்போம்; பெரியாரை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்ப்போம் என்று கூறி நிறைவு செய்தார்.

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின்
மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ்

கி.வீரமணி, திராவிடர் கழகம், வாழ்த்து

The Modern Rationalist Annual Number 2024 நூலினை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் எஸ்.அல்போன்ஸ் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையில், திராவிடர் கழகம் மட்டுமின்றி, தமிழ் கூறும் நல்லுலகமே ‘ஆசிரியர்’ என்று அழைக்கும் ஆளுமைமிக்க ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்து தனது உரையை தொடங்கினார். குறுகிய காலம் பழகிய தனக்கே ஆசிரியரின் 92 ஆம் ஆண்டு நிகழ்வு உணர்ச்சிகரமானதாக இருக்கிறது என்றால், அவரோடு பழகிய மற்றவர்களுக்கும், வந்திருக்கக்கூடிய உங்களுக்கெல்லாம் எவ்வளவு உணர்ச்சி பூர்வமான தருணம் இது என்பது புரிகிறது என்றும், ஆசிரியரின் கருப்புச் சட்டைக்குள் பார்த்தால் அந்த உடலில் எலும்பும் சதையும் இல்லை; மூளையும் இதயமும் தான் இருக்கிறது என்றார். பெரியாரை, தான் நிறைய படிக்கத் தொடங்கி இருப்பதாகவும், படிக்க படிக்க அதிகம் படிக்க தோன்றுகிறது என்றும், புதிய வெளிச்சத்தை தருகிறது என்றும், அதன் மூலமாக எதிர்காலத்தைப் பற்றிய பயம் தனக்கு அதிகம் இருப்பதாகவும் கூறினார். காரணம், சுயமரியாதை இயக்கத்திற்கு மட்டும் இது நூற்றாண்டு அல்ல ; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் இது நூற்றாண்டு தான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பற்றிய அதிக புரிதல் கொண்ட இயக்கம் திராவிடர் கழகமும், ஆசிரியரும்தான் என்றார். 1962 ஆம் ஆண்டிலேயே, ஆர்.எஸ்.எஸ்.பற்றி ஆசிரியர் அவர்கள் எழுதிய குறிப்பை எடுத்துரைத்து, எதிர்வரும் ஆபத்தினை புரிந்துகொண்டு, மக்களை காப்பாற்றுபவர்தான் உண்மையான தலைவராக இருக்க முடியும். அந்த இடத்திலிருந்து தான் ஆசிரியர் இந்த மக்களை காத்து நிற்கிறார் என்றார.

50 ஆண்டு காலம் தான் அரசியலில் இருப்பதாகவும், யாரும் ஒரு இயக்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக எடுத்துரைக்காத பல செய்திகளை, ஆசிரியர் பேச்சாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் எடுத்து இயம்பிய விதத்தை குறிப்புகளுடன் பதிவு செய்தார். திராவிடர் கழகம் மட்டுமல்ல, தமிழ்நாடே எப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒப்பிட வேண்டும் என்பதை பெரியாருக்கு முன், பெரியார் வாழ்ந்த காலம், பெரியாருக்கு பின் என்று பிரித்துப் பார்த்தால் நாம் அடைந்திருக்கக்கூடிய மாற்றங்கள் புரியும் என்று ஆசிரியர் பதிவு செய்த செய்தியை கூறினார். தந்தை பெரியாருக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த விதவைகளின் எண்ணிக்கையும் தற்போதைய சூழலையும் ஒப்பிட்டு பேசினார் . எந்த நோக்கத்திற்காக ஆசிரியரைப் பெரியார் தேர்ந்தெடுத்தாரோ, அதில் ஆசிரியர் வெற்றி கண்டு இருக்கிறார் என்றும், ஆசிரியரை எப்படி வாழ்த்துவது என்று யோசிக்கின்ற போது ‘வாழ்விருக்கும் வரை உங்களுக்கு பணி இருக்க வேண்டும்; உங்களுக்கு பணி இருக்கும் வரை உங்களுக்கு வாழ்வு இருக்க வேண்டும்’ என்றார்.

பெரியார் காலத்தில் நேரு, காமராஜர், இந்திரா காந்தி போன்ற நேர்மையான எதிரிகள் இருந்தார்கள். தற்போது நாணயமற்ற எதிரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.அதன் விளைவு தான் EWS என்ற 10 சதவீத இடஒதுக்கீட்டு முறை, விஸ்வகர்மா திட்டம் போன்ற செய்திகளை ஆதாரத்துடன் பதிவு செய்தார். மதவாத நஞ்சு எப்படி வடமாநிலங்களில் பரப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆய்வை மேற்கோள் காட்டினார். பெரியார் காலத்திற்கு பின்பு என்று எடுத்துக் கொண்டால் வாக்களிக்கும் வாக்காளர்கள் பாசிஸ்டகளாக (Fascists) இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் நம்முடைய பணி இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்றும், அந்தப் பயணத்தில் ஆசிரியர் உழைத்துக் கொண்டே இருக்கிறார் என்றார். 92 வயதில் 82 ஆண்டுகள் மிகப்பெரிய அறத்துடன் வாழ்ந்திருக்கிறார். 82 ஆண்டுகளில் அவர் கண்ட போராட்டக் களங்கள் எவ்வளவு பெரிய தியாக உணர்வுடன் இருந்திருக்கிறது என்பதை வியந்து கூறினார். என் தொண்டை இருக்கின்ற வரை பேச வேண்டும் என்று தந்தை பெரியார் கூறிய விதத்தையும், இந்த மக்களுக்காக பேசிக் கொண்டே, பயணித்துக் கொண்டே இருந்த ஆச்சரியத்தை எடுத்துக் கூறி, ஆசிரியரும் அவ்வழியில் பயணிப்பதை கண்டு, தான் வியப்படைவதாகவும் பெரியாரை உலகமயமாக்குவோம்; உலகத்தை பெரியார் மயமாக்குவோம் என்ற ஆசிரியரின் குறிக்கோள் எந்த அளவிற்கு இந்த சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பதிவு செய்தார். உலகம் முழுவதும் பெரியாரிய பரப்புரை எவ்வளவு முக்கியம் என்பதையும், ஆர்எஸ்எஸ் எப்படி எல்லாம் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதையும் , வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி AI போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி பாசிச கருத்துகளை பரப்ப முயற்சி செய்யக் கூடிய விதங்களை பல்வேறு சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.

இந்தச் சூழலில், ஆசிரியரின் பணி என்பது மிக மகத்தானது என்றும், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியரை பாரத்து பெரியாரின் பகுத்தறிவு பால் உண்ட திருஞானசம்பந்தர் என்றார். ஆனால் தன்னுடைய பார்வையில் ஆசிரியரை ‘நவீன திருநீலகண்டர்’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றார். காரணம், ஆசிரியருக்கு இந்த எடுத்துக்காட்டு பிடிக்காமல் இருந்தாலும் கூட இந்த போராட்ட களத்தில், அரசியல் போராட்டத்தில் இலாபம், பதவி அனைத்தையும் தங்களைப் போன்று அரசியல்வாதிகள் எடுத்துக் கொண்டாலும், ஏச்சுப் பேச்சுகளை எல்லாம், தான் வாங்கிக் கொண்டு, இந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடிய ‘நவீன திருநீலகண்டர்’ என்றார். நமக்காக உழைத்து, நமக்காக வாழ்ந்து, நமக்காக உழைக்க இருக்கும் ஆசிரியர் அவர்களை வாழ்த்துகிறேன்! உங்களுக்கு என்றும் துணையாக நிற்போம் என்று கூறி நிறைவு செய்தார்.

தமிழர் தலைவரின் கருத்துரை

92 ஆண்டுகளில் 82 ஆண்டுகளாக பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரும், 62 ஆண்டு காலம் விடுதலையின் ஆசிரியருமான, திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர், திராவிடர் கழகக் குடும்பங்களின் குடும்பத்தலைவர், தகைசால் தமிழர், மனிதநேய போராளி ஆசிரியர் அவர்கள் உரை ஆற்றினார்.

திராவிடம் வெல்லும்;
அதை வரலாறு சொல்லும்!

மிகுந்த உற்சாகத்துடன் தனது மகிழ்வையும், நன்றியையும் வருகை தந்த அனைவருக்கும் தெரிவித்து, தன்னுடைய பயணத்திற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக நின்ற தனது வாழ்விணையர் அம்மையார் மோகனா அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். தனக்கு வயதாகிறது என்பது தனது வேலைக்கு ஏற்படும் தடையாக இருந்து விடக்கூடாது என்ற நோக்கத்தால், எப்போதும் தன்னை 29 ஆகவே உணரும் விதத்தை எடுத்துக் கூறினார். களத்தில் நிற்பதற்கு தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் வயதுக்கு வரையறை என்று, வழக்கம்போல் புதிய வாழ்வியல் சிந்தனையை நமக்கு தந்தார். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய தேவையையும், அறிவியல் மனப்பான்மையின் மூலமாக நாம் பிற்போக்குத்தனங்களை எப்படி சாட வேண்டும் என்றும், அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். செல்லக்கூடிய பாதைக்கு எதிராக நாம் செய்ய வேண்டிய பிரச்சாரங்களை எடுத்துரைத்தார்.

தந்தை பெரியாரின் காலத்தில் நாணயமான எதிரிகள் இருந்தார்கள். இப்போது இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விளக்கினார். குறிப்பாக, இன்றைய அரசியல் சூழலில் புதிது புதிதாக வரக்கூடிய டிரோஜன் குதிரைகளைப் பற்றி மிகத் தெளிவாக, தமிழ்நாட்டு மக்களுக்கு புரிகின்ற வகையில் விளக்கினார். திராவிடர் இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்று ஆசிரியர் கூறிய விதத்தைக் கேட்டு அரங்கமே அதிர்ந்து போனது. நம்முடைய கவலை அடுத்த தேர்தலை பற்றியது மட்டுமல்ல; அடுத்த தலைமுறைக்கானது. எனவே ‘சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்’ என்பதற்கு ஏற்ப நம்முடைய இயக்கத் தோழர்களின் பயணம் இருக்க வேண்டும் என்றார்.

சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு, சமதர்மம் போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய திராவிடர் இயக்கம் யாராலும் அசைக்க முடியாததாக இருக்கிறது என்றும்,மேடைக்கு வருகின்றபோது 92 ஆக இருந்தேன், இங்கிருந்து செல்கின்ற போது 29 ஆக திரும்புகிறேன் என்றார். நம்முடைய பயணத்தில் வரக்கூடிய எதிரிகளை சரியாக இனம் காணுவதற்கு பெரியாரிய கண்ணாடி, நுண்ணாடியாக இருக்கிறது என்றும், பெரியார் கண்ணாடி அணிந்த நம்மால் தான் அதனை நுட்பமாக கண்டறிய முடியும் என்பதை, அண்மைக்கால அரசியல் சூழலுடன் ஒப்பிட்டு கூறினார்.
ஆசிரியரின் உற்சாக பேச்சால், தெளிவான சிந்தனையால், மிகச் சரியான நேரத்தில் டிரோஜன் குதிரைகளை அடையாளம் கண்டு தெரிவித்ததால், இனி வரும் காலம் எப்படி இருக்கும் என்பதை விவரித்ததால், திராவிட முன்னேற்ற கழகத்தை, திராவிட மாடல் அரசை காப்பாற்ற வேண்டும் என்ற நம்முடைய நோக்கம் எதன் அடிப்படையில் என்பதை விளக்கிய விதத்தால், அரங்கமே மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்து, தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்டு, இனிவரும் காலங்களில் களத்தில் நிற்பதற்கு தயாராகி எழுந்து நின்று, கரவொலி எழுப்பி உற்சாகத்தை. வெளிப்படுத்தினர் .திராவிடம் வெல்லும்; அதை வரலாறு சொல்லும்! என்ற வரிகளுடன் ஆசிரியர் தன் உரையை நிறைவு செய்தார்.

The Modern Rationalist Annual Number 2024 மிகச் சிறப்பாக வெளிவர காரணமாக அமைந்த கழகத்தின் பொருளாளர் மானமிகு குமரேசன் அவர்கள் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி நன்றியுரை ஆற்றினார். வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் இணைப்புரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *