தரமற்ற உணவு விற்பனையா? உடனே புகார் அளிக்கலாம் : தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உறுதி!

viduthalai
1 Min Read

சென்னை, அக்.14- தரமில்லா உணவுகளுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் எனவும், புகாரளிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், சாலையோர கடைகள், தங்கும் விடுதிகள் என பல்வேறு இடங்களில் சாப்பிடும் உணவு தரமற்றதாக இருந்தால் உணவு பாது காப்பு துறையினரிடம் புகார் அளிக்கவும், அதே நேரம் புகார்தாரரின் விவரங்களை பாதுகாக்க ஏதுவாகவும், பிரத்யேகமாக அலைபேசி எண் செயல் பாட்டில் உள்ளது.

பொதுமக்கள் தாங்கள் சாப்பிடக்கூடிய உணவகங்களில் கெட்டுப் போன, தரமற்ற உணவுகள் இருப்பதை அறிந்தால், 9444042322 என்ற எண்ணுக்கு உடனடியாக வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம்.

வாட்ஸ் அப்பில் கெட்டுப்போன உணவு குறித்த தகவல்களை ஒளிப் படங்களாக, காட்சிப் பதிவுகளாகவோ அல்லது குறுஞ்செய்தியாக கூட தட்டச்சு செய்து அனுப்பி வைக்கலாம்.

புகார்கள் தலைமை கட்டுப்பாட்டு மய்யத்தில் பதிவு செய்யப்படும். பின்னர் புகாரின் அடிப்படையில் குறிப் பிட்ட பகுதியை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல்கள் பகிரப்படும். ஆனால். புகார்தாரரின் அலைபேசி எண் மற்றும் விவரங்கள் அனுப்பப் படாது. எனவே புகார் அளிக்கும் பொதுமக்கள், தங்களது விவரங்கள் வெளியே வந்துவிடுமோ என்றுபயப்பட வேண்டிய தில்லை. புகார் பெறப் பட்ட அடுத்த 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் விவரங்கள் தலைமை கட்டுப்பாட்டு மய்யத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர், புகார்தாரரின் எண்ணுக்கும் அனுப்பப்படும்.
புகார்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிறிது தாமதம் ஆகலாமே தவிர 72 மணி நேரத்துக்குள் புகா ருக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதிவேற் றப்படும்.

அதேபோல ‘புட் சேப்டி கனெக்ட்’ என்ற செயலி மூலமாகவும், [email protected] மூலமாகவும் பொதுமக்கள் புகார்களை அனுப்பலாம்.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *