புதுடில்லி, செப்.3- உலகம் முழுவதும் பருவநிலை கணிக்க முடியாத அளவுக்கு மாற்றம் அடைந்து வருகிறது. பருவமழை தொடங்கும் முன்னே, வட இந்தியா முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அது ஒருபுறம் இருக்க, மறுபுறம் வெயில் வெளுத்து வாங்கியது. இதுகுறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
1901ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2024 ஆம் ஆண்டு மட்டுமே ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரி வெப்பநிலை 24.29 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது.
வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் சராசரி வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் நல்ல மழை பதிவாகும். இதனால் ஏற்பட்ட மேகமூட்டமான சூழல் குறைந்தபட்ச வெப்பநிலையை இயல்பை விட உயர்த்தியது.
சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை, குறிப்பாக மத்திய இந்தி யாவில், மிக அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தைப் போலவே செப்டம்பர் மாதத்திலும் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.