பாரம்பரிய நெல் பாதுகாப்பு மய்யம் சார்பாக நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மறைந்த இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் சீரிய முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தத் தேசிய நெல் திருவிழாவானது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் தலைமையில் நடைபெற்ற விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்’ என்ற விருதைத் தஞ்சை விவசாயிகள் வழங்கி கவுரவித்தனர். விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “மாபெரும் மனிதர் நம்மாழ்வார் ஆரம்பித்து வைத்ததை நெல் ஜெயராமன் சத்தமில்லாமல் ஒரு பெரும் புரட்சியாக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
அவர்களுக்கு என்ன செய்தாலும் அது பத்தாது என்றே நினைக்கிறேன். சில விருது மகிழ்ச்சியைக் கொடுக்கும், சில விருது திருப்தியைக் கொடுக்கும். சில விருது புகழைக் கொடுக்கும். அப்படியான விருதாக இதை நான் பார்க்கிறேன்” என்றார்.
மறைந்த நெல் ஜெயராமன் உடல்நலக் குறைவால் தீவிரசிகிச்சையில் இருந்தபோது அவரது மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டவர் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி, அவரது மகன் படிப்பதற்கான கல்விச் செலவு முழுவதையும் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.