நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 23- கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட் டத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அங்கு மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிபா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கைகள் தொடர்பாக தமிழ் நாடு சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;-
* காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை நிபா வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.
* அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.
* அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
* பரிசோதனை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.
* ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்.
* நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
* காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
* கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *