கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாதது ஏன்?

Viduthalai
2 Min Read

நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க் கோலம்!

புதுடில்லி, ஜூலை 22 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பதே மோசடியானது; நீட் தேர்வு முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது; வசதி படைத்தவர்கள்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்கிற நிலைமை உருவாகி உள்ளது; நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
18 ஆவது மக்களவையின் 2 ஆவது கூட்டத் தொடர் இன்று (22.7.2024) காலை தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நீட் தேர்வு மோசடிகள் விவகாரத்தை கிளப்பினார் ராகுல் காந்தி. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏன் இன்னும் பதவி விலகவில்லை என்று கேட்டார். இதை வலியுறுத்தி எதிர்க்கட்சி களின் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடா ளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தேர்வு முறையே மோசடியானதாக உள்ளது. வசதி படைத்தவர்கள், பணம் வைத்திருப்பவர்களால் இந்திய தேர்வு முறையையே விலைக்கு வாங்க முடியும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. நீட் உள்ளிட்ட முதன்மையான தேர்வு முறை களில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தம்மைத் தவிர மற்றவர்களை குறை சொல்கிறார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

உறுப்பினர்கள் கண்டனம்!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் அனிதா முதல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகையால் நீட் தேர்வு முறையையே ஒன்றிய அரசு ரத்து செய்தாக வேண்டும் என்றார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒன்றிய அமைச்சராக தர்மேந்திர பிர தான் நீடிக்கும் வரை போட்டி தேர்வு களில் முறைகேடுகள் நடக்கத்தான் செய்யும். நீட் வினாத்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் 2,000–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிகழ்வும் நடந்துள்ளது. தர்மேந்திர பிரதான் அமைச்சராக இருக்கும் வரை மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்றார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்.

ஆர்எஸ்பி கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் பேசுகையில், நீட் முறைகேடுகள் தேர்வு எழுதுகிற மாணவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் பதிவு செய்வது முதல் அனைத்து படிநிலைகளிலும் முறைகேடு நடைபெறுகிறது என்றார்.
ஆனால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய தேர்வு முறை, மிகச்சிறந்த தேர்வு முறை இதைக் குறை சொல்வது கண்டனத்திற்குரியது என்று ராகுல்காந்தியை மிரட்டும் தொனியில் பதிலளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *