“ஆட்சியில் இருந்த போது பழங்குடியினர் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. அந்த சமூகத்தினரை இருளில் வைத்திருந்தது. ராம பிரானைக் கவனித்துக் கொண்டவர்களான பழங்குடி சமூகத்தினர், அவரை உத்தமராக உருவாக்கிய பெருமைக்குரியவர்கள். அதனால்தான் பழங்குடியினரின் சீடர்களாகவும் அவர்களை வணங்குபவர்களாகவும் நாங்கள் இருக்கிறோம்”
– பிரதமர் மோடியின் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம், 2023 நவம்பர் 5.
230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் 47 தொகுதிகள் பழங்குடியினருக்கானது. அதனால்தான் பழங்குடியினர் பாசத்தை மோடி காட்டுகிறாரா? இல்லை. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு, அதாவது 2023 ஜூலையில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 36 வயது பழங்குடியின இளைஞர் அமர்ந்திருக்க அவர் மீது இன்னொரு நபர் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கும் காட்சிப் பதிவு வைரலானது. அது ஆளும் பா.ஜ.க ஆட்சிக்கு அவப்பெயரைத் தேடித் தந்தது. அதனைப் போக்கச் சிறுநீரால் அவமதிக் கப்பட்டவரின் கால்களைக் கழுவி மன்னிப்பு கோரினார் பா.ஜ.க முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்.
“சிறுநீர் கழிக்கப்பட்ட நபரும், காலை கழுவி மன்னிப்புக் கேட்ட நபரும் வேறு வேறு. பா.ஜ.க ஆள்மாறாட்டம் செய்துவிட்டது” எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மனிதாபிமானமற்ற அந்தச் செயலைச் செய்தவர் பிரவேஷ் சுக்லா. சித்தி தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கேதார்நாத் சுக்லா மற்றும் ரேவா தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர சுக்லா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பிரவேஷ் சுக்லா யார் என்பதைச் சொன்னது. பா.ஜ.க ஆதரவாளர் என்பதால் அவரை முதலில் கெஞ்சிக் கூத்தாடி காவல் துறையினர் கைது செய்ததும், பிறகு அது பிரச்சினை ஆகவே, பிரவேஷ் சுக்லாவை வலுக்கட்டாயமாக கைது செய்யும் காட்சிப் பதிவு ரீ சூட் போனதும் கைது நடவடிக்கையில் நடந்த நாடகக் காட்சிகள். சிவராஜ் சிங் சவுகான் கால்களைக் கழுவினார். மோடியோ ராமனைத் துணைக்கு அழைத்து வந்தார்.