தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு

Viduthalai
4 Min Read

சென்னை,ஜன.12- தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9.1.2023 அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக முழுமையாக படிக்க வில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக நேற்று (11.1.2023) பேரவை கூட்டத்தொடரில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு,”ஆளுநர் உரையின்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் முழக்கமிட்டதை தவிர்த் திருக்க வேண்டும். ஆளுநர் இருக்கை எதிரே நின்று முழக்கம் எழுப்பியதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆளுநர் உரையின் போது அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை. முதலமைச்சரின் மதிநுட்பத்தால் தான் சட்டமன்றத்தின் மாண்பு காக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களின் நடவடிக்கைகளுக்கு முன்னு தாரணம். இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதலமைச்சர் காத்துள்ளார். தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது.”  -இவ்வாறு அவர் பேசினார்.

தூத்துக்குடி- இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து: 

துறைமுகத் தலைவர் தகவல்

தூத்துக்குடி,ஜன.12- தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் துறைமுக தலைவர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி: தூத்துக்குடிக்கு  இந்தாண்டும் வழக்கம்போல சுற்றுலா பயணிகளுடன் பயணிகள் கப்பல் வந்து உள்ளது. இதேபோல் மேலும் பல சுற்றுலா கப்பல்கள், தூத்துக்குடிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நம் மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பொருளாதார பலன்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கரோனா காலத்தில் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் மாலத்தீவு, ஈரான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்காக தற்காலிகமாக ஒரு முனையம் தயார் செய்து இருந்தோம். 

தற்போது இந்த முனையத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தூத்துக்குடி – கொழும்பு இடையே நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பலை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது இரு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்துள் ளனர். இதனால் 2 மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க  வாய்ப்பு உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் அயலக தமிழர் தினம் கொண்டாட்டம்

சென்னை,ஜன.12- தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் சார்பில் நேற்று அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலகத் தமிழர் தினம் நேற்று (11.1.2023) கொண்டாடப்பட்டது. உலகெங்கும் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளையும், தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வரும் நிலைகளையும் இன்றைய அயலகத்தமிழர் தினம் எடுத்தியம்பும் முறையில் “அயலக தமிழர்களால் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ் ஆய்வுகள் போக்குகளும்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக தமிழாராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பில் நடந்தது.

விழாவில், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், அயலகத் தமிழர் நலவாரியத்தின் உறுப்பினர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கால்டுவெல் வேள்நம்பி,  உலகின் பெரும்பாலான நாடுகளின் தமிழ் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சென்னையில் ஜன.21இல் 

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம் 

சென்னை, ஜன.12- குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வருகிற 21ஆம் தேதி சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் நடக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று (11.1.2023) வெளியிட்டுள்ள அறிக்கை: 

பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடும் முழுவதும்  ஒவ்வொரு  வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, ஜனவரி  மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும்  புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள்  புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் சிறப்பு முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *