வாசிங்டன் ஜூலை 21- அமெரிக்க கடற்படையில், 300 வீரர்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்று முத்திரை பதித்துள்ளார், 17 வயதேயான இந்திய வம்சாவளி இளம் பெண் ரித்தி சவுகான்.
நம் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ரித்தி சவுகான், அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறு வயது முதலே ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதீத ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்க கடற்படையின் இளைஞர் பிரிவான ‘சீ கேடட்’ அமைப்பில் இணைந்தார். இவரது கடின உழைப்பு, தலைமைப் பண்பு மற்றும் அசாத்திய திறமைகளைக் கண்டு வியந்த கடற்படை நிர்வாகம், தற்போது இவருக்கு மிக உயரிய பொறுப்பை வழங்கியுள்ளது.
பொதுவாக அனுபவமிக்க அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் 300 கடற்படை வீரர்களை வழிநடத்தும் ‘ரெஜிமென்டல் கமாண்டர்’ பொறுப்பு, ரித்தி சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை கண்காணிப்பது மற்றும் அணிவகுப்புகளை தலைமை தாங்கி நடத்துவது போன்ற முக்கியப் பணிகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் கடற்படையில், ஒரு இளம் இந்திய வம்சாவளி பெண் இத்தகைய உயரிய பதவியை அடைந்திருப்பது பன்னாட்டு அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள ரித்தி சவுகான், “இந்த பொறுப்பு எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். கடின உழைப்பும், இலக்கை நோக்கிய பயணமும் இருந்தால் எந்தவொரு உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு எனது இந்த பயணமே சாட்சி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரித்தி சவுகானுக்கு, இந்தியர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
