வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த ‘டால்மண்டி’ சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள், அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் மற்றும் மசூதிகளை இலக்கு வைத்து நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க டால்மண்டி சந்தை
பவுத்தம், சமணம், வேத மரபுகள், சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பணிக்காலங்களை நேரில் கண்ட வரலாற்றுப் பெட்டகமாக இந்த சந்தைப் பகுதி திகழ்கிறது. பல மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் சங்கமமாக விளங்கும் இந்த சந்தையின் முக்கிய சாலையை விரிவுபடுத்துவதாகக் கூறி, பல நூற்றாண்டு கால பழமையான கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட நடவடிக்கையா? எழும் சர்ச்சைகள்
பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சைகள் ஏற்கெனவே நிலவி வருகின்றன. இந்தச் சூழலில், டால்மண்டி பகுதியில் அமைந்துள்ள 16 பழமையான மசூதிகளை இலக்கு வைத்தே இந்த சாலை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ராஜஸ்தானில் மிகவும் பழமையான மற்றும் நெரிசலான ‘சப்ஜிகா மண்டி’ பகுதி இன்றும் எவ்வித மாற்றமுமின்றி இயங்கி வருகிறது. ஆனால், வாரணாசியில் மட்டும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பாரம்பரிய இடங்கள் அகற்றப்படுவதன் பின்னணியில் மத ரீதியான அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்
நீலகண்ட் திவாரி மீது குற்றச்சாட்டு
நீலகண்ட் திவாரி மீது குற்றச்சாட்டு
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதற்காகத் தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளான வாரணாசி நகரத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நீலகண்ட் திவாரி, தற்போது புல்டோசர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மேடை அமைத்து இந்த இடிப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.
பவள விழா கண்ட பாரம்பரிய கட்டடங்களையும், பல தலைமுறை மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் வழிபாட்டுத் தலங்களையும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அழிப்பது, நாட்டின் வரலாற்றுத் தடங்களையே அழிப்பதாக அமையுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
மசூதிகள் இடிபடுவதை பணிகள் நடக்கும் பகுதியில் மேடைபோட்டு, சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவினரும் ரசித்து மகிழ்கின்றனர்.
இதை எதனோடு ஒப்பிடலாம் என்றால் 2023 முதல் 2025 வரை பாலஸ்தீனப் பகுதியான கஸாவில் இஸ்ரேல் குண்டுமழைப்பொழிந்தது.
அதை ஹபா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் யூதப் பிரமுகர்கள் சிறப்பு மேடை அமைத்து கண்டு ரசித்தனர். பிப்ரவரி 22ஆம் தேதி மோடி இஸ்ரேல் சென்றபோது இஸ்ரேல் இந்தியாவின் பாதர்லாண்ட் (தந்தை நாடு) என்று கூறினார். அவர்கள் செய்ததை அப்படியே இங்கும் செய்கின்றனர்.
