ஜெய்ப்பூர், ஆக.9 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா அருகே பாரனா கிராமத்தில் அமைந்துள்ளது காகுல் தேவ் கோவில். இது மாநிலத்தின் மிகப் பழைமையான கோவிலில் ஒன்றாகும்.
இந்தக் கோவில் பல நூற்றாண்டுகளாக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகி றது. அதாவது காகுல் தேவ் கோயிலை விஷ்ணு குமார் பலாய் அவர்களின் குடும்பத்தினர் பல நூற்றாண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர். மேவார் மன்னர் மகா ராணா பிரதாப்பின் பேரன் மகாராணா கரண் சிங் II அவர்களால் 1624 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செப்பேடு தாழ்த்தப்பட்ட வம்சத்தின் பரம்பரை பூசாரி மற்றும் உரிமையாளர் நிலைக்குச் சான்றாக உள்ளது. இந்நிலையில், இந்தக் கோயிலின் மீதான பொருளாதாரம் மற்றும் ஜாதி வெறிகுண்டார்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சிலர் கோயி லின் நிர்வாகத்தைக் கைப்பற்ற முயல்வதாக விஷ்ணு குமார் பாலாய் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கோயிலின் மீது தங்கள் குடும்பத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்ட முயன்றபோது, விஷ்ணு குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
விஷ்ணு குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மட்டுமே செய்துள்ளனர். ஆனால், தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரையும் கைது செய்யவில்லை.
குடும்பத்தின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கு விஷ்ணு குமார் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்தக் கடிதத்திற்கு மோகன் பகவத் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
