இந்நாள் – அந்நாள்: தந்தை பெரியார் – ஆசிரியர் முதல் சந்திப்பு நடைபெற்ற நாள் இன்று (29.07.1944)

3 Min Read

திராவிடர் கழகத் தலைவர் – ‘‘ஆசிரியர்’’ அவர்கள். சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிட மணியால் வீரமணி எனப் பெயர் மாற்றம் பெற்றதில் தொடங்குகிறது அவருடைய சமூகநீதிப் பயணம்,

1944 ஜூலை 29 அன்று கடலூரில் கோடை முடிந்து மழையும் வெயிலும் அல்லாத காலம், திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு 29.7.1944 அன்று நடைபெற்றது. மாநாட்டினைத் திறந்து வைத்துச் சிறப்புரை நிகழ்த்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர் கி.வீரமணியை பள்ளிப்பருவத்தில் இருந்தே பகுத்தறிவுப் பாதையில் அழைத்துச் சென்றவரான அவருடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி பி.ஏ. அவர்களின் பெருமுயற்சியால் தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

மாநாட்டிற்கு விருதுநகர் வி.வி.இராமசாமி தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா தந்தை பெரியார். திராவிட நாட்டுப் படத்திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா. அனைவரும் ரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களைத் திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள். முதல் முதலாக அய்யாவைச் சந்திக்கப் போகிறோம் என்ற ஆர்வம் – காலை எப்போது விடியும் என்று காத்திருந்த கி.வீரமணிக்கு – உறக்கம் ஓடிப்போய்விட்டது. காலையில் ஏ.பி.ஜனார்த்தனம் எம்,ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க கி.வீரமணியை அழைத்துப்போனார். கி.வீரமணிக்கு அய்யாவைச் சந்திக்கப் போகிறோமே என்ற இனம்கொள்ளாத ஆர்வம் தொற்றிக்கொண்டது. அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். “இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணி தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான்” என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜனார்த்தனம்.

கி.வீரமணி அய்யாவைப் பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றிருந்துவிட்டு, மீண்டும் ‘வணக்கம்’ கூறி வெளியே வந்துவிட்டார். மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்துச் ‘சிங்கம் கர்ஜிப்பது போல்’ தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றினார். இம் மாநாட்டில் மாணவர் கி.வீரமணியும் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளைச் சிறுவன் வீரமணி சந்தித்த மகத்தான மாநாடு அது. மேடையில் அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

மாநாட்டில் பேசிய அண்ணா, கி.வீரமணியின் பேச்சை வைத்தே தொடங்கினார். “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல, பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான் என்று தெரிகிறது”  என்று அறிஞர் அண்ணா அவர்கள் கி.வீரமணியைப் பற்றி குறிப்பிட்டார்கள்.  ஆசிரியர் – அய்யா முதல் சந்திப்பே பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட தயாராகி உள்ள உருக்கின் நிலைதான் – ஏற்கெனவே பதப்படுத்தி வைத்திருந்தார் மாணவர் வீரமணியின் ஆசான் திராவிடமணி. அப்படித் தயாராகி இருந்த வீரமணி, அய்யா அவர்களைச் சந்தித்து அவரது உரையைக் கேட்ட பிறகு முழுமையாக களத்திற்குச் செல்லக் கூடிய அறிவுக்கூர்மைமிக்க இளம் போர்வாளாக உருமாறிய நாள் இந்நாள்!

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியப் பங்காற்றிய மாநாடு. இந்த மாநாட்டில், திராவிட இயக்கத்தின் எதிர்காலத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இத்தகைய பெரும் கூட்டத்தில், ஒரு சிறுவன் மேடை ஏறி, தந்தை  பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் முன்னிலையில், அத்தனைக் கூட்டத்தினரையும் ஈர்க்கும் வகையில் முழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆசிரியர் கி.வீரமணி, தனது சிறு வயதிலேயே பகுத்தறிவு கருத்துகளையும், சமூக நீதி சிந்தனைகளையும் ஆழமாகப் புரிந்து கொண்டு அவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவரது பேச்சாற்றல், வாதத்திறன்,  துணிச்சல், அங்கிருந்த தலை வர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது.

ஆசிரியர் கி. வீரமணியின் இந்தச் சிறு வயதுப் பேச்சு, அவரது எதிர்கால பொது வாழ்க்கைப் பயணத்திற்கான ஓர் உறுதியான அடித்தளமாக அமைந்தது. அன்று முதல் இன்று வரை, தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தாங்கிப் பிடித்து, சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

தந்தை பெரியார் – ஆசிரியர் முதல் சந்திப்பு நடைபெற்ற 82 ஆம் ஆண்டு நாள் இன்று (29.7.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *