இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!

2 Min Read

காத்மாண்டு, ஜூலை 27– இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாள அரசு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி ஒன்றிய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதன் பிறகு ஒன்றிய அரசு புதிதாக ரூ.200, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை அறிமுகம் செய்தது.

இதையடுத்து நேபாளத்தில் அந்த நாட்டு அரசு இந்தியாவின் ரூ.100 நோட்டுகளை விட அதிக மதிப்புடைய நோட்டுகளுக்குத் தடை விதித்தது. ரூ.25,000 மதிப்புக்கு ரூ.100 மற்றும் அதை விட குறைந்த மதிப்புடைய ரூ.50, ரூ.20 உள்ளிட்ட நோட்டுகளை மட்டும் நேபாளத்துக்கு எடுத்து வர அனுமதியளித்தது.

இந்நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை நேபாளம் தற்போது தளா்த்தியுள்ளது. அதாவது, இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்பட்ட ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ.25,000 மதிப்புக்கு ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டு வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை இந்தியா தவிர பிற நாடுகளில் இருந்து நேபாளத்துக்கு கொண்டு வரக் கூடாதென்றும், அதேபோல் நேபாளத்திலிருந்தும் இந்திய ரூபாய் நோட்டுகளை இந்தியா தவிர பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாதென்றும் நேபாள ராஷ்டிர வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்துக்கு சுற்றுலா வருவோர் தங்களது கையில் ரொக்கமாக 5,000 அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.83 லட்சம்) வரை எடுத்து வரும்பட்சத்தில் சுங்கத் துறையினரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை என்றும், அந்தப் பணம் இந்திய கரன்சியாக இருப்பின் ரூ.100 நோட்டுக்கு மேல் மதிப்பு கொண்டதாக இருக்கக் கூடாதென்றும் நேபாள ராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது.

5,000 டாலா் மதிப்புக்கும் கூடுதலான தொகையை ரொக்கமாக எடுத்து வந்தால் சுங்கத் துறையினரிடம் அதனைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு
நேபாளம் கோரிக்கை:

நேபாளத்தில் பயன்படுத்தப்படும் தேசிய அடையாள அட்டையைப் பயண ஆவணமாக அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வருவோர் தங்களது குடியுரிமைச் சான்றிதழ், கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ஆகியவற்றை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துகின்றனா்.

நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டின் தேசிய அடையாள அட்டையை இந்தியா அங்கீகரிக்குமானால், அந்நாட்டினா் இனி அந்த அடையாள அட்டையை 3-ஆவது பயண ஆவணமாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *