உப்பள்ளி, ஜூலை 3 கருநாடகாவில் ஓடும் அரசுப் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே தலையை நீட்டி எச்சில் துப்ப முயன்ற அய்.டி.அய். மாணவர், எதிரே வந்த சாக்குவாகனம் மோதி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அய்.டி.அய். மாணவர்
கருநாடக மாநிலம் நவலகுந்து பகுதியைச் சேர்ந்த பக்கிரேஷ் (வயது 17) என்ற மாணவர் அய்.டி.அய். படித்து வந்தார். இவர் உப்பள்ளியில் இருந்து லட்சுமேஷ்வர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தார்.பேருந்து லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மாணவர் பக்கிரேஷுக்கு எச்சில் துப்ப வேண்டும் என்று தோன்றியுள்ளது. இதற்காக அவர் பேருந்தின் ஜன்னல் வழியாகத் தனது தலையை வெளியே நீட்டியுள்ளார்.அதே நேரத்தில், அந்தச் சாலையில் எதிரே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்திற்குள் அரசுப் பேருந்தைக் கடந்து சென்றது. அப்போது, ஜன்னலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த மாணவனின் தலையில் சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. சரக்கு வாகனம் மோதிய வேகத்தில் மாணவனின் தலை துண்டிக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூர விபத்தைக் கண்டு பேருந்தில் இருந்த சக பயணிகள் அதிர்ச்சியிலும் உறைந்து அலறினர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்திற்குக் காரணமான சரக்கு வாகனம் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பயணங்களின் போது ஜன்னல் வழியே தலையை நீட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
