அயோத்தி கோவில் கொள்ளையும்– அம்பலமாகும் போலிகளும்!

“அயோத்தி ராமன் கோவில் மோசடி வழக்கு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். கோவிலில் சிலை வைக்கும் விழாவை முன்னின்று நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்” என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பின ருமான பினராயி விஜயன் கூறியுள்ளார். ஆனால், இந்த மோசடி குறித்து இது வரை பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்கவில்லை.

உத்தரப் பிரதேச மாநில முதல மைச்சரும், ராமன் கோவில் கட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தவருமான யோகி ஆதித்யநாத் வழக்கம் போலக் கம்பு சுற்றுகிறார். “ராம பக்தர்களுக்கு அக்னிப் பரீட்சை வைத்துச் சோதிக்கா தீர்கள்; அவர்களின் நம்பிக்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள் ளுங்கள்” என்கிறார். மேலும் அவர் ஸநாதன நம்பிக்கையோடு விளையாடுப வர்கள் யாராக இருந்தாலும், அதற்கான விளைவுகளை அவர்கள் அனுப வித்தே தீர வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் ஆதித்யநாத். இப்போது, கொள்ளையடித்துப் பிடி பட்டவர்களும், பிடிபடாமல் தப்ப வைக்கப்படுபவர்களும் பக்தர்கள் போர்வையில் பதுங்கி இருப்பவர்களே ஆவர். எனவே, இவர்களை ஆதித்யநாத் குறிப்பிடவில்லை. மாறாக, இந்த முறைகேடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும், உத்தரப் பிரதேச மாநில அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுபவர்களைத்தான் அவர் மிரட்டுகிறார். இந்த மோசடியைக் கண்டித்துக் கோவிலுக்குப் பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலை வர்களை அசோக வனத்துச் சீதையைப் போல, வீட்டுச் சிறையில் வைக்கிறது பாஜக அரசு.

கோவில் காணிக்கையைச் சுருட்டி யது மட்டுமல்ல, ராமர் கோவில் கட்டு மானத்தின் போதே மோசடி துவங்கி விட்டது. இது தொடர்பாக, தற்போது கேள்வி எழுப்பப்பட்டதற்கு, உத்தரப் பிரதேச மாநிலத் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாதக் ஆத்திரமடைந்து, “பாபர் மசூதிக்காகவும் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டன. அதைப் பற்றி யாராவது கேள்வி கேட்கிறார்களா?” என்று சீறியுள்ளார். இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டிற்குப் பதில் அளிக்க முடி யாமல், இடிக்கப்பட்ட பாபர் மசூதி குறித்துப் பதிலளிக்கிறார் இவர்.

கழிவறையில் பதுக்கப்பட்ட காணிக்கைப் பணம்: கிடுக்கிப்பிடியில் சிக்கிய ஊழல்

எதிர்க்கட்சிகளின் கிடுக்கிப்பிடி கார ணமாக, விசாரணை தீவிரமடைந்த நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள கழிவறையில் கூடப் பணம் பதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கோவில் காணிக்கையை உண்டியலில் போடுங்கள் என்று சொல்லிவிட்டு, மோசடிக்காரர்கள் உண்டியல் பணத்தை எடுத்து, கழிவறையில் பதுக்கியுள்ளனர்.

பாபர் மசூதியை இடிப்பதற்காக ரத யாத்திரை நடத்தியது அன்றைய பாஜக தலைவர் எல்.கே. அத்வானி. பாபர் மசூதி இடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டது விஎச்பி அமைப்பைச் சேர்ந்த அசோக் சிங்கால் உள்ளிட்டவர்கள். ஆனால், மோசடிப் புகார் வெளியே வந்தவுடன், “நாட்டின் எந்தப் பகுதியிலும் கோவில்க ளைக் கட்டுவது அல்லது நிர்வகிப்பது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வேலை அல்ல. கோவில் நிர்வாகம் அறக்கட்டளையைச் சார்ந்தது. அங்கு நடப்பவை அனைத்துக்கும் அறக்கட்ட ளையே பொறுப்பு. இதில், ஆர்எஸ்எஸ் அமைப்பையோ அல்லது அரசையோ குறைகூறுவதை ஏற்க முடியாது” என்று நழுவுகிறார் விஎச்பி அமைப்பின் பன்னாட்டுத் தலைவர் அலோக் குமார்.

பொறுப்பற்ற நழுவல்களும்– அம்பலமாகும் ‘புதிய சகாப்தத்தின்’ யோக்கியதையும்!

கோவிலைக் கட்டியதும், நிர்வகிப்ப தும் அறக்கட்டளைதான் என்றால், கோவிலில் சிலை வைக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாஜகவின் கார்ப்பரேட் கூட்டாளி கவுதம் அதானி போன்றவர்கள் அங்கே அணிவகுத்துச் சென்றது ஏன்? அயோத்தி கோவில் திறப்பு விழாவின் போது, “இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்” என்று பிரதமர் மோடி புல்லரித்துப் பேசியதன் பொருள் என்ன? “இனி, நமது ராம் லல்லா ஒருபோதும் கூடாரத்தில் வசிக்க மாட்டார்” என்று பிரதமர் பேசினார் அல்லவா? பிரதமர் குறிப்பிட்டதன் புதிய சகாப்தம் என்பது இதுதானா?

திறப்பு விழாவுக்கு மறுநாள், “அயோத்தியில் ஜனவரி 22-ஆம் தேதி நாம் பார்த்தது பல ஆண்டுகளுக்கு நமது நினைவுகளில் நிலைத்திருக்கும்” என்று தனது சமூக ஊடகத்தில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஊழல் புகார்கள் வெளிவந்தவுடன், “இந்தக் கோவி லுக்கும் எங்களுக்கும் சம்பந்த மில்லை; எல்லாமே அறக்கட்டளைதான்” என்று பாஜகவினர் அலறுவது ஏன்?

ராமர் கோவிலை நிர்வகித்து வந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் ஏதோ செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல; அனைவருமே ஆர்எஸ்எஸ் – விஎச்பி அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். தற்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ள சம்பத் ராய், சிறீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்தான். அனில் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

அயோத்தி கோவில் திறப்பு விழாவின் போது, கோவில் சிகரத்தில் காவிக் கொடியை ஏற்றி வைத்த மோகன் பாகவத் ‘இது ராமராஜ்ஜியத்தின் துவக்கம்’ என்று கூறினார். இப்போது, கோவில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட குறித்த விவரம் வெளியானவுடன், இது அறக்கட்டளை சம்பந்தப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது.

நீதிக்காக எழும் வழக்கறிஞர்களின் குரலும்– நீதிமன்றத்தின் மவுனமும்!

அயோத்தி ராமர் கோவிலில் நடந்துள்ள கூட்டுக் கொள்ளை என்பது எளிய பக்தர்களின் நம்பிக்கை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும். இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மட்டுமே. கோவில் அறக்கட்டளையில் உள்ள முக்கிய அதிகாரிகளைக் காவல்துறையினர் பாது காக்கின்றனர் என்று பைசாபாத் மற்றும் அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கத்தின் உறுப்பினர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என்றும் பைசாபாத் – அயோத்தி வழக்கறிஞர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, இந்த மோசடி குறித்து சிபிஅய் விசாரிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஷீல் நாகு அமர்வு, “இதில் என்ன அவசரம்? வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது” என்று கூறியுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையினரின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, சாட்சியங்கள் அழிக்கப்படலாம் என்று வாதிடப்பட்ட நிலையில்தான், “வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடாது” என்று கூறப்பட்டுள்ளது. வானம் என்றைக்கு இடிந்து விழுகிறதோ, அன்றைக்கு இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்படலாம். அதுவரை ஒன்றும் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லைதான்.

கர சேவை என்ற பெயரில், அயோத்திக் குக் கொண்டு செல்லப்பட்ட செங்கல் கூட விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. கோவில் கட்டப்பட்ட பிறகும், போலி பக்தர்களால் மோசடி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராம பிரானின் வில் ஆற்றல் குறித்துக் கம்பர் பாடுகையில், “சொல்பொக்கும் கடிய வேல சுடுசரம்” என்பார். அதாவது, ராமனுடைய வில்லிருந்து புறப்படும் அம்பு, அவர் சொன்ன சொல்லின்படியே சென்று தீமைகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பது இதன் பொருள். ஆன்மீகத்தின் பெயரால், மக்களை மோசடி செய்தவர்களுக்கு எதிராக மக்களின் கோபம்தான் இப்போது சுடுசரமாகப் புறப்பட வேண்டியுள்ளது.

நன்றி: ‘தீக்கதிர்’, 2.6.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *