புதுடில்லி, ஜூன் 26 திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) கட்சி மாறிய விவகாரத்தில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக மக்களவைத் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் அக்கட்சியின் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தற்போது ‘இந்திய தேசிய குடிமக்கள் கட்சி’ என்ற அதிகம் அறியப்படாத மாற்று அரசியல் கட்சியில் இணைந்துள்ளனர்.
சிவசேனா பிளவு: அதேபோல, சிவசேனா (உத்தவ்) தரப்பைச் சேர்ந்த 6 எம்பிக்கள், மகாராட்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.தலைமைக்கு எதிராகச் செயல்பட்டு, மாற்று முகாம்களுக்குச் சென்ற இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாகப் பதவி நீக்கம் (தகுதி நீக்கம்) செய்ய வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ்) ஆகிய இரண்டு கட்சிகளின் தரப்பிலும் மக்களவைத் தலைவரிடம் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், அவையின் விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின்படி இந்த விவகாரத்தில் மக்களவைத் தலைவர் எடுக்கப்போகும் முடிவு தற்போதைய அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை
தமிழ்நாடு அரசுக்கு
கேரள முதலமைச்சர் கடிதம்

கொச்சி, ஜூன் 26– போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு உள்பட அண்டை மாநில அரசுகளுக்கு கேரள முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் வி.டி. சதீசன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மாநிலத்தில் ‘ஆபரேஷன் டூபான்’ என்ற பெயரில் போதைப் பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டு நடவடிக்கை
இந்த விசயத்தில் கூட்டு நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தி தமிழ்நாடு உள்பட அண்டை மாநில அரசுகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், போதைப் பொருள் கடத்தல் தொடர்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
வழக்குகள்
கூட்டு நடவடிக்கை அவசியம் என அண்டை மாநிலங்களை அவர் வலியுறுத்தி உள்ளார். இதன்படி, தமிழநாடு, கருநாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். கூட்டு நடவடிக்கை திட்டங்களை முறைப்படுத்த உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கேரளாவில் 2025-ஆம் ஆண்டில் 36,314 போதை பொருள் தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2024-ஆம் ஆண்டில் 27,530 என்ற அளவில் இருந்தன.
