ஏர் இந்தியா நடவடிக்கை!
வாரணாசி, ஜூன் 26- டில்லி, மும்பை போன்ற நாட்டின் முக்கிய பெருநகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுடன், 2ஆம் மற்றும் 3ஆம் நிலை சிறிய நகரங்களை இணைக்கும் புதிய ‘ஹப் அண்ட் ஸ்போக்’ (Hub and Spoke) மாடல் திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் வாரணாசியில் நேற்று (25.6.2026) அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ‘ஈஸி கனெக்ட்’ திட்டத்தின்படி, சிறிய நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் புறப்படும் அந்தச் சிறு நகரிலேயே பன்னாட்டு பயணத்திற்கான பயணச்சீட்டு முன்பதிவு, உடைமைகள் சரிபார்ப்பு மற்றும் குடியேற்ற சோதனைகள் உள்ளிட்ட அனைத்தையும் முன்னதாகவே முடித்துக் கொள்ள முடியும்.
இதன் மூலம், சிறிய நகரங்களில் இருந்து டில்லி போன்ற முக்கிய விமான நிலைய மய்யங்கள் (Hub) வழியாக, உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
நேற்று (25.6.2026) வாரணாசியில் தொடங்கப்பட்ட இந்தச் சேவையின் மூலம், பல்வேறு நாடுகளுக்குச் செல்லவிருந்த பன்னாட்டு பயணிகள் டில்லி வழியாக ஒரே விமானத்தில் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ (CEO) கேம்பெல் கூறுகையில்: “இந்த ‘ஈஸி கனெக்ட்’ விமானச் சேவையானது முதற்கட்டமாக வாரணாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இத்திட்டம் சென்னை, அமிர்தசரஸ், அகமதாபாத், கோவா, கொச்சி, அய்தராபாத் மற்றும் நாட்டின் இதர முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார். ஏர் இந்தியாவின் இந்த புதிய முயற்சியால் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களைச் சேர்ந்த பன்னாட்டு பயணிகள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி நலன் மாநில விருது
விண்ணப்பிக்க ஜூன் 30 வரை கால நீட்டிப்பு!
சென்னை, ஜூன் 26– மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் சிறப்பாகச் சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர நாள் விழாவில் முதலமைச்சர் மாநில விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளார். இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விருப்பமுள்ளவர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை https://awards.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.
