புதுடில்லி, ஜூன் 19 பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) முறை குறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் தேர்வு வடிவமைப்பை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அறிக்கை சமர்ப்பிப்பு
கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் நலம் மற்றும் விளையாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கியூட் தேர்வு முறை குறித்த தனது விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் (16.6.2026) மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தது. இந்த நிலைக்குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திக் விஜய் சிங் தலைமை தாங்கியுள்ளார்.
குழுவின் முக்கிய கவலைகள் மற்றும் பரிந்துரைகள்: மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி அமைப்பின் மீதான சுமையைக் குறைக்கவும், பல்வேறு கல்வி வாரியங்களில் பயிலும் மாணவர்களை சமமான நிலைக்குக் கொண்டு வரவும் 2022-2023ஆம் கல்வியாண்டில் இந்த ‘கியூட்’ தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்து: இருப்பினும், இளங்கலை படிப்புகளுக்கான பொதுவான சேர்க்கை முறையாக கியூட் தேர்வை அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, இக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லை.
எம்சிக்யூ முறைக்கு எதிர்ப்பு: சுயாதீனமான மற்றும் தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் கூடிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, பலவுள் தெரிவு வினா (MCQ) முறை என்பது முற்றிலும் பொருத்தமற்றது என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசியக் கல்விக்கொள்கை 2020-இல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நோக்கங்களை இந்த நுழைவுத் தேர்வு முழுமையாக நிறைவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப, கியூட் தேர்வின் வடிவமைப்பு மற்றும் வினாத்தாள் தரம் ஆகியவற்றை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலுவாகப் பரிந்துரைத்துள்ளது.
