புதுடில்லி, ஜூன் 16 உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு (நல்சா தீர்ப்பு) மாற்றுப்பாலினத்தவர் தொடர்பாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில்,”ஒருவர் தன்னை ஆண் என்றோ, பெண் என்றோ அல்லது மாற்றுப்பாலினத்தவர் என்றோ சுயமாக அடையாளம் காட்டும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதற்கு எந்த மருத்துவச் சான்றிதழும் தேவையில்லை” என்று கூறியது. ஆனால் ஒன்றிய மோடி அரசோ மாற்றுப் பாலினத்தவர் சட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தைக் கொண்டு வந்தது.
இந்த புதிய திருத்தத்தில் 2014இல் உச்சநீதிமன்றம் கொடுத்த ‘சுய அடையாள உரிமையை’ பறிப்பதாகவும், இதற்கு மருத்துவ ரீதியான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி டில்லி, கேரளம், கருநாடகா, ராஜஸ்தான் போன்ற மாநில உயர்நீதிமன்றங்களில் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
ஒரே சட்டத்திற்கு எதிராகப் வெவ்வேறு மாநில உயர்நீதி மன்றங்கள், வெவ்வேறு விதமான தீர்ப்புகளை வழங்கினால் குழப்பம் ஏற்படும் என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், பல்வேறு உயர்நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள ‘மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026’-க்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (15.6.2026) விசாரணைக்கு வந்தது.
வாதத்தின் போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026 தொடர்பாக ராஜஸ்தான், கருநாடகா, கேரளம், டில்லி உயர்நீதி மன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதனால் பல மாநிலங்களில் சிதறி இருக்கும் இந்த வழக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு, உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்க வேண்டும். குறிப்பாக 2014இல் வழங்கப்பட்ட தீர்ப்பு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்தது. எனவே, இந்தப் புதிய வழக்கை அதைவிடப் பெரிய அமைப்பான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் தான் சரியான தீர்வு கிடைக்கும்” என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அமர்வு, ”டில்லி, கேரளம் உள்ளிட்ட உயர்நீதி மன்றங்களில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணைகளுக்கு இடைக் காலத் தடை விதிக்கிறோம்.
உயர்நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தவர்களிடம், இந்த வழக்குகளை ஏன் உச்ச நீதி மன்றத்திற்கு மாற்றக் கூடாது? என்று விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
