பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட த.வெ.க. எம்எல்ஏ சரவணனை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, ஜூன் 12 பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் நேற்று (11.6.2026) கூறியிருப்பதாவது:

‘‘உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது சிறீவைகுண்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்த பெண்ணை சிறீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்த பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.

பதவியில் இருந்து நீக்க வேண்டும்

ஆளுங்கட்சியில் ‘‘யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். ‘தனிமனித ஒழுக்கம்’ பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த சோபா மாடல் அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது-பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.

ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த தவெக ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?. இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?.

சிறீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *