சென்னை, ஜூன் 11 சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள குமரன் காலனி மற்றும் கோதமேடு ஆகிய இடங்களில், 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான மின் வெட்டைக் கண்டித்து, பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மின் அலுவலகம் முற்றுகை!
மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின் வாரிய அதிகாரி களிடம் காரசாரமான கேள்விகளை எழுப்பினர்.
“அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் வாழும் குடியிருப்புகளில் மட்டும் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், எங்களைப் போன்ற சாமானிய மக்கள் வாழும் பகுதியில் மட்டும் மணி கணக்கில் மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?” என பொதுமக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பினர்.
கோடைக்காலத்தின் வெப்பம் மற்றும் புழுக்கம் தாங்க முடியாமலும், கொசுத் தொல்லையாலும் குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்பட்டதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி, கைகளில் குழந்தைகளை ஏந்தியபடி மின் அலுவலகத்தை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர். பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், மின் வாரிய அதிகாரிகளும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மின் விநியோகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்த சம்பவத்தால் சைதாப்பேட்டை பகுதியில் நள்ளிரவில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
