அண்மையில் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலுக்குச் சென்று பார்வையிட்டார். ஒன்றிய அரசின் இந்த ஏற்பாட்டுக்கு பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றன.
‘அடிமைச் சின்னத்தை முதன்மைப்படுத்துவதா?’ – அமைப்புகள் கேள்வி எழுப்பின. இதுதொடர்பாக இந்துத்துவ அமைப்புகளின் பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தாவது:
“இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து மன்னர்களின் கோட்டைகளும், கொத்தளங்களும், கலைநயமிக்க பல்லாயிரமாண்டுப் பழமையான ஆன்மீகக் கோயில்களும் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட சூழலில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட, அடிமைச் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மகாலை ஒன்றிய அரசு வெளிநாட்டு விருந்தினர்களுக்கு முதன்மையாகக் கூட்டிச் செல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.”
‘புனிதப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ எனப் பரிந்துரை!
மேலும், “எதிர்காலத்தில் இந்தியாவிற்கு வரும் வெளி நாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களை ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக: “திரிவேணி சங்கமம், அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட இந்துக்களின் புனிதப் பகுதிகளுக்கு வெளிநாட்டு விருந்தினர்களை அழைத்துச் செல்லும்போது, அது இந்தியப் பண்பாட்டின் மீதான உலக நாடுகளின் கவனத்தை இன்னும் பெரிய அளவில் ஈர்க்கும்” என்றும் அந்த அமைப்புகள் தங்களது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்துத்துவ அமைப்புகளின் இந்த மத வெறுப்புக்கு கண்டனங்களும் குவிகின்றன.
