சென்னை, மே 28 ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உருளை விலை கணிசமாக உயர்ந்துள்ளதே இந்த உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சமோசா: இதுவரை ரூ. 12-க்கு விற்கப்பட்டு வந்த சமோசா, இனி ரூ. 20-க்கு விற்கப்படும். வடா பாவ்: ரூ. 13-லிருந்து ரூ. 20 ஆக விலை உயர்த்தப் பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய ரயில் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை
செவிலியரே ஊசிபோட்டுச் சிகிச்சை அளிக்கும் அவலம்!
திருவண்ணாமலை, மே 28 திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
வேட்டவலம் பெரூராட்டியில் பகுதியில் செயல்படுத்தபட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேட்டவலம் பகுதியை சுற்றியுள்ள அணுகுமலை, நெய்வானத்தம், வைப்பூர், நாரையூர், அண்டம் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் செவிலியரே நோயாளிகளுக்கு ஊசிபோட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கும் அவல நிலை உருவாகி யுள்ளது. மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பல மணிநேரம் காத்து கிடக்கும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
