சென்னை, மே 11- அதிமுகவில் இபிஎஸ் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அவரது அரசுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக, மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. அந்த கட்சி சார்பில் வெற்றி பெற்ற 47 சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் நேற்று முன்தினம் (9.5.2026) சி.வி.சண்முகம் கூட்டிய எதிர்ப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இபிஎஸ் தலைமையில் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியை தழுவி விட்டதால் இனி கட்சியை தாங்களே வழிநடத்துவது என்றும், இபிஎஸ் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தினர்.
இந்த கருத்து மோதல்கள் காரணமாக, கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் கூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இபிஎஸ் மீண்டும் குழு தலைவர் ஆவதற்கு சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அடுத்த கட்டம் பற்றி முடிவு செய்வதற்காக, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தன் வீட்டில் கூட்டி இபிஎஸ் நேற்று (10.5.2026) காலை ஆலோசனை நடத்தினார். இதில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 16 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களும், மேலும் சிலரும், மதியம் எம்ஆர்சி நகரில் வேலுமணி மற்றும்
சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசினர்.
சி.வி.சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகவும், அவரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
