‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம்!
சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு ஒரு வலுவான ஊன்று கோலாக அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர் ஒருவரின் காட்சிப் பதிவைப் பகிர்ந்து முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: ‘‘இந்தத் தம்பி மட்டுமல்ல, இதுபோல லட்சக்கணக்கான தம்பிகளின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது தமிழ்ப்புதல்வன் திட்டம். இவர்களின் கல்வி தொடரவும், எளிய குடும்பங்களின் அடுத்த தலைமுறைகள் செழிக்கவும் ‘திராவிட மாடல்’ அரசு தொடர்ந்து பாடுபடும்.’’ மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய விவரங்கள்:
நிதியுதவி
தகுதியுள்ள மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
தகுதி
6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
நோக்கம்
‘புதுமைப்பெண்’ திட்டத்தைப் போலவே, மாண வர்களின் கல்விச் சுமையைக் குறைத்து, உயர்கல்வி சேர்க்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு 2024, ஆகஸ்ட் 9 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
வறுமை காரணமாக உயர்கல்வி தடைபடக்கூடாது என்ற இலக்கோடுச் செயல்படும் இத்திட்டம், தமிழ்நாட்டின் கல்விப் புரட்சியில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
விடியல் பயணம்:
மகளிர் முன்னேற்றத்தின்
புதிய மைல்கல்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘விடியல் பயணம்’ இலவசப் பேருந்துத் திட்டம், மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்றியமைத்த ஒரு புரட்சிகரமான திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ்நாடு முழுவதும் 7,712 ‘விடியல் பேருந்துகள்’ இயக்கப்படுகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்ட 2021-2022 நிதியாண்டு முதல், 2025-2026 நிதியாண்டின் மார்ச் ஒன்றாம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் மொத்த மதிப்பு 897.82 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளவை:
பயனாளிகள்
மகளிர் மட்டுமல்லாது, திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இந்த இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் பெரும் பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான பயணங்கள் மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
தொடர் வெற்றி
ஆண்டுக்கு ஆண்டு இந்தப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது. ‘‘நாம் செயல்படுத்திய இத்திட்டம், இன்று அனைத்து மாநிலங்களிலும் எதி ரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாத ஒரு நிலையை இது எட்டியிருக்கிறது.’’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியின் அடுத்த கட்டத்தில் (ஆட்சி 2.0), இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு, இன்னும் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என்றும், இது வெறும் வாக்குறுதி அல்ல, ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்’ என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதிபடக் கூறியுள்ளார்.
