சென்னை, மார்ச் 11- ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் போர் எதிரொலியாக தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவக சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்று (10.3.2026) தமிழ்நாட்டில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில உணவகங்களில் உணவு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை, அமைந்தகரை, திருவான்மியூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பல பெரிய மற்றும் சிறிய உணவகங்களில் இதுகுறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக சென்னை உணவகங்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி உள்ளன. உணவகங்கள் பிரியாணி, பரோட்டா போன்ற உணவுகளை தவிர்த்து வருகின்றன. பல்வேறு உணவு வகைகள் கிடைக்காது என சென்னையில் உள்ள பிரபல உணவகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் சமைக்கும் உணவுகளுக்கு மட்டும் உணவகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.
