அய்தராபாத், பிப்.27 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலை யளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். அய்தராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த 21.2.2026 அன்று நடை பெற்ற கருத்தரங்கில் நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இடம் தர மறுப்பு
அப்போது, அவர் பேசியதாவது: “பொது ஒழுக்கம் அல்லது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை விட, அரசியலமைப்பு ஒழுக்கமே ஒரு நீதிபதிக்கு மிக முக்கியமானது. சமூகத்தில் இன்றும் நிலவும் பாகுபாடுகளை விளக்க உங்களுடன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
என் மகளின் தோழி ஒருவர், முனைவர் பட்டம் பயிலும் அந்த மாணவி தெற்கு டில்லியில் தங்குமிடம் தேடிச் சென்றபோது, அவரது குடும்பப் பெயரைக் கேட்ட விடுதி உரிமையாளர், அவர் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும் இடம் தர மறுத்துவிட்டார். இதே போல் ஒடிசாவில் தாழ்த்தப் பட்ட பெண் சமைத்த மதிய உணவை, ஜாதி பாகுபாடு காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் மறைந்து கிடக்கும் பெரிய அவலங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே.
2009-ஆம் ஆண்டு டில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ‘நாஸ் அறக்கட்டளை’ (Naz Foundation) வழக்கை கவனித்தால், தன்பாலின ஈர்ப்பு குற்றமாக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்த அந்தத் தீர்ப்பு, பெரும்பான்மை மக்கள் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதை விட, அரசியலமைப்புச் சட்டம் எதைச் சரி என்று சொல்கிறதோ அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது. ஒரு செயலைப் பொதுமக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக, சட்டப்பிரிவு 21-இன் கீழ் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசு பறிக்க முடியாது.
அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது ஜனநாயக நிறுவனங்கள் தங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதையும், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்கிறது. நிர்வாக அதிகாரம் மற்றும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு தனிநபர்களின் உரிமை களை நசுக்கக் கூடாது என்பதில் நீதிமன்றங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதிகார பலத்தை விட சட்டத்தின் மாண்பே ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டும்.
முன்னாள் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ‘துர்குட்’ மார்ஷலின் பொன்மொழி ஒன்று உண்டு `ஒரு நீதிபதியின் உண்மையான அதிகார ஆதாரம் என்பது பதவியோ அல்லது சட்ட அதிகாரமோ அல்ல. அரசியலமைப்பின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பகத் தன்மையும், அதன் மூலம் அவர் ஈட்டும் மக்களின் மரியாதையும் மட்டுமே'” தனது உரையை நிறைவு செய்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
