ஆலந்தூர், பிப்.10- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் சென்னையில் இருந்து டில்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆளும் பா.ஜ.க.விற்கு நாடாளுமன்றத்தை நடத்துவதற்கே விருப்பமில்லை. தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை, நூல்களில் இருந்தும் இதழ்களில் இருந்தும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் ராகுல் காந்தி பேசும் போது வெளியிடப்படாத ஒரு நூலை காட்டி பேசக்கூடாது என்று கூறி அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தி கடந்த வாரம் கூட்டதொடரையே அவர்கள் நடத்தவில்லை.
இந்த வாரமும் அதே நிலை நீடிக்கும் என நாங்கள் கருதுகிறோம். பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது குறித்து வினா எழுப்புவோம். உரிமைக் குரல் எழுப்புவோம்.
தமிழ்நாட்டிற்கு கல்வி உள்ளிட்ட பல துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை இன்னும் ஒதுக்காமல் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் மாநில வாரியாக கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யும் போதும் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.
பா.ஜ.க. ஆளாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களை திட்டமிட்டு வஞ்சித்து நிதிகளை ஒதுக்காமல் மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர். தமிழ்நாடு அந்த வரிசையில் ஒன்று. அதேபோல் மேற்கு வங்கம், கேரளா, கருநாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது என்றார்.
தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது
எடப்பாடி பழனிசாமிக்கு புகாருக்கு
அமைச்சர் கோவி.செழியன் மறுப்பு!
அமைச்சர் கோவி.செழியன் மறுப்பு!
தஞ்சை, பிப். 10- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறி இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் கோவி.செழியன் அளித்துள்ள பதிவில், தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியிருப்பது வடிகட்டிய பொய். வேண்டுமென்றால் அ.தி.மு.க. ஆட்சியில் விளைவிக்கப்பட்ட மற்றும் கொள்முதல் எவ்வளவு? திமுக அரசு அைமந்ததற்கு பிறகு பயிரிடப்பட்ட நெல் அளவு, கொள்முதல் எவ்வளவு என்பைதெயல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அபரிமித வளர்ச்சி அைடந்து தஞ்சை மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தூய்மைப் பணியாளரின் நேர்மை
சாலையில் கிடந்த 20 பவுன் நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்தார்!
திருவாரூர், பிப். 10- சாலையில் கண்டெடுத்த 20 பவுன் நகைகளை காவல் துறையில் ஒப்படைத்த திருவாரூர் தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவி முத்துலட்சுமி உட்பட 6 பேருடன் 7.2.2026 அன்று ரயிலில் புறப்பட்டு நேற்று முன்தினம் (8.2.2026) திருவாரூர் வந்தார்.
20 பவுன் நகை
ராதாகிருஷ்ணன் மகளுக்கு மார்ச் 8ஆம் தேதி திருத்துறைப் பூண்டியில் திருமணம் நடைபெறவுள்ளதையொட்டி, அதற்காக வாங்கிய 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள்ஆகியவற்றை திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டில் கொடுத்துவைக்க முடிவு செய்து, அவற்றை தனி பையில் வைத்து எடுத்து வந்திருந்தனர்.
பின்னர், திருவாரூரில் இருந்து ஆலத்தம்பாடிக்கு ஆட்டோவில் அனைவரும் புறப்பட்டனர். அப்போது, ஆட்டோவின் பின்புறம் வைத்திருந்த நகைப்பை சாலையில் விழுந்துள்ளது. ஆனால், இதை அவர்கள் கவனிக்கவில்லை.
இதனிடையே, விருப்பாச்சி நடப்பு சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளர் துரை, சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்தபோது அதில் நகைகள், வெள்ளிப் பொருட்கள் இருப்பதைக் கண்டார்.
இதுகுறித்து அவர் நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்தானமேரியிடம் நகைப் பையை ஒப்படைத்தார். இதனிடையே, நகை காணாமல் போனது குறித்து புகார் அளிக்க ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி அவர்களிடம் நகைகளை ஒப்படைத்தனர்.
குவியும் பாராட்டு: நேர்மையுடன் செயல்பட்டு நகைப் பையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரைக்கு, காவல் துறையினர் பொன்னாடை போர்த்தி பாராட்டினர். ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். வறுமையிலும் நேர்மையைக் கடைபிடித்த துரையின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
