புதுடில்லி, ஜன.21 ஒன்றியத்தில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பி.ஜே.பி. மற்றும் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அந்தக் கட்சியில் சுமார் 18 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியா மட்டுமன்றி, உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பாஜகவுக்குக் கிடைக்கும் நன்கொடை கணிசமாக அதி கரித்து வருகிறது.
கடந்த 2024-2025 ஆம் நிதியாண்டில் பி.ஜே.பி.க்கு ரூ.6,769 கோடி நன்கொடை கிடைத்தது. தற்போதைய சூழலில் பி.ஜே.பி.யின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி உள்ளது. இதில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.9,390 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.634 கோடி வட்டி கிடைத்து இருக்கிறது.
கடந்த 2024-2025 ஆம் ஆண்டுகளில் டில்லி, ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரத்துக்காக பி.ஜே.பி. ரூ.3,335.36 கோடியைச் செலவிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பி.ஜே.பி. அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
