முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்:
சென்னை, டிச. 5- முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து, 104 என்ற மருத்துவ சேவை எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன வசதிகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தகவலைக் கூறினார்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி மற்றும் 35.95 லட்சம் ரூபாய் மதிப்புடைய தானியங்கும் புற ரத்தக்குழாய் நோயறிதல் கருவி ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகளையும் அவர் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து தனியார் மருத்துவமனைகளுடன் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து, பொதுமக்கள் 104 என்ற மருத்துவ சேவை எண்ணில் புகார் அளித்தால், அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்தார்.
