தருமபுரி, ஜூலை 14– தருமபுரியில் நேற்று முன்தினம் (12.7.2026) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரான் போர்
ஈரான் மீது மீண்டும் போர் தொடுக் கப்பட்டுள்ளதற்குக் காரணமான அமெரிக்காவுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து சட்டமன்றத்தில் விவாதித்து பேசியிருக்க வேண்டும்.
“வாக்குகளை வாங்குவதும், விற்பதும் குற்றமாகும். அதேபோல, தேர்தலில் வெற்றி பெற்று விரலில் வைக்கப்பட்ட வாக்கு மை காய்வதற்குள் பதவியை விட்டு விலகுவதும் அத்தகைய ஒரு குற்றத்திற்கு இணையானதே ஆகும்.”
புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தவெக-விற்கான கோரிக்கைகள்
தமிழ்நாட்டின் “புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவிக்கு வந்துள்ளார். அவரிடமிருந்து மக்கள் அதிகமான திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். மாறாக, அவரிடமிருந்து எந்த ஒரு எதிர்மறையான உடல்மொழியோ அல்லது வாய்மொழியையோ மக்கள் எதிர்பார்க்கவில்லை. லஞ்சம் கூடாது என்று அவர் கூறுவது வரவேற்கத்தக்கது.”
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதில்
பாஜகவை எதிர்க்க திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தொல்.திருமாவளவன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வீரபாண்டியன்:
அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் இயல்பான ஒன்றுதான்.
தற்போதைய சூழலில், ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.
