சென்னை, நவ. 18- எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழ்நாடு வரலாறு குறித்து ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமையான தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1633ஆம்ஆண்டு முதலான புத்தகங்களும், 1670ஆம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம், மாறிவரும் காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்படும் என்றும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, 20 நபர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து, தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றை வெளிகொண்டு வரும் வகையிலான ஆராய்ச்சியை ஓராண்டுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையுடன் மேற்கொள்வதற்கு முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பிற விவரங்கள் www.tamilnaduarchives.tn.gov.in என்ற இணைய தளத்தில்வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவண காப்பக ஆவணங்கள் உதவியுடன் தமிழ்நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
Leave a Comment
