திருவனந்தபுரம், ஜூன் 8 எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசு, ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மேலும் தங்களது ஹிந்துத்துவ கொள்கையை இவர்களைக் கொண்டு திணித்து வருகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலத்தைக் கடத்தி வரும் ஆளுநர்கள், அரசு நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தைப் போதித்து வருகிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக…
கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், ஆளுநர் மாளிகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயன்படுத்தி வரும் காவிக் கொடி ஏந்திய பாரதமாதா நிழற்படத்தை வைத்து, அரசு நிகழ்ச்சிகளில் அந்த நிழற்படத்திற்கு மலர் தூவிய பிறகு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்.
உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, ஆளுநர் மாளிகையில் மரம் நடும் விழாவுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்தது. பாரதமாதா படத்துக்கு மலர்தூவிய பிறகே நிகழ்ச்சியை நடந்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த கேரள அரசு நிகழ்ச்சியை, தலைமை செயலகத்துக்கு அதிரடியாக மாற்றியது.
ஆளுநரைத் திரும்பப் பெறுக!
ஆளுநர் மாளிகையை பா.ஜ.க. அலுவலகமாக மாற்றி வரும் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி ஏந்திய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார், குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘‘ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார், தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார், எனவே அவரை திரும்ப அழைக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.