கேள்வி 1: ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேஷ் மத நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக பணி நீக்கம் செய்தது நியாயம்தானா?
– இரா.முல்லைக்கோ, பெங்களூரு
பதில் 1: தவறு. மதச்சார்பற்ற அரசமைப்பின்படியே இப்படி பாகுபடுத்திப் பார்ப்பது முறையல்ல. மத விழாவில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று எந்தச் சட்டத்தில் உள்ளது?
அடிப்படை கருத்துரிமை பாதுகாப்புக்குரிய சட்டப் பிரிவுகள்படி இது தவறு.
*****
கேள்வி 2: தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த விதிகள் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ‘திராவிட மாடல்’ அரசுக்குக் கிடைத்த வெற்றி என்று கருதலாமா?
– த.பொன்மணி, பூந்தமல்லி.
பதில் 2: நிச்சயமாக. உண்மை நிச்சயம் வென்றே தீரும்.
****
கேள்வி 3: நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் சிவன்போல வேடமணிந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் சிவதாண்டவமாடும் நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்காமல் இதுபோன்று பக்திப் போதையை ஊட்டுவது என்பது சட்டப்படி குற்றம் ஆகாதா?
– செல்வி பாபு, மதுரை.
பதில் 3: இது முழுக்க முழுக்க ஹிந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். மதபோதையைப் பரப்பும் திட்டம்.
பள்ளிக் கல்வி அமைச்சகம் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இன்றேல் இது தொற்றுநோய்களாகப் பரவிடும். இது திட்டமிட்ட செயல். தடுக்கப்பட்டாக வேண்டும்.
*****
கேள்வி 4: வயது வந்தோருக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில் நாடுதழுவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டதில், தமிழ்நாடு 100 சதவீதம் தேர்ச்சிபெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி இருப்பதின் மூலம், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் எங்கும் எதிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கும் என்று நாட்டிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா?
– சரஸ்வதி ரவி, பெருங்களத்தூர்.
பதில் 4: உறுதியாக. ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் இது!
*****
கேள்வி 5: 7-ஆவது முறையாக தி.மு.க. அரியணை ஏறி ஆட்சியைத் தொடரும் என தி.மு.க.வினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்திருப்பது, தொண்டர்களிடையே போதிய எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாமா?
– கி.கோவிந்தராஜ், வந்தவாசி.
பதில் 5: அவரது ஒவ்வொரு சாதனையும், ஊக்க உரையும், மானுடப் பார்வையோடு கூடிய செயல்திறனும், தொண்டர்களையும் தாண்டி ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதாகவே உள்ளது.
*****
கேள்வி 6: கருநாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளதைப் போன்று, தமிழ்நாட்டிலும் ‘திராவிட மாடல்’ அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?
– அ.அப்துல் அகத், அய்தராபாத்.
பதில் 6: செய்வது அவசியம். இதில் தாமதம் கூடாது.
****
கேள்வி 7: டில்லி ஜங்க்புரா பகுதியில் உள்ள ‘மதராசி கேம்ப் ‘ எனப்படும் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் தமிழர்களின் வீடுகள் நூற்றுக்கணக்கில் இடிக்கப்பட்டது முற்றிலும் மனிதத் தன்மையற்ற செயல் என்றும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வசிப்பதற்கு வீடு, பிள்ளைகளுக்கு கல்வி-சுகாதாரம் உள்ளிட்டவற்றை உடனடியாக செய்து தரவேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதற்கு, ஒன்றிய அரசு செவிசாய்க்குமா?
– கே.கார்த்திகேயன், சிவகங்கை.
பதில் 7: இதில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு தமிழ்நாட்டுக்குத் திரும்பி சொந்த ஊர்களுக்கு வருகிறவர்களுக்கு போதிய உதவிகள் செய்யப்படும் என்பது சற்று ஆறுதல். எந்த நல்ல கருத்துகளும் ஏற்கப்படுவதும் எதிர்க்கட்சிகள் சொல்வதால்தானே.
அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு மாற்று இட வசதி செய்து தந்திருந்து அங்கு குடியேறிய பிறகே வீடுகளை இடித்திருக்க வேண்டும். அதிலும் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒன்றிய அரசுக்கு வகுப்பெடுக்கும் தகுதி உள்ளது என்பதற்கு சான்று இது!
****
கேள்வி 8: திருவிழாக்கள் இல்லாத 6 மாதங்களுக்கு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க ‘திராவிட மாடல்’ அரசு நடவடிக்கை எடுத்து வருவது, நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற தொலைநோக்குப் பார்வை என்று கருதலாமா?
– எஸ்.முனியம்மாள், வெங்கோடு.
பதில் 8: வரவேற்றுப் பாராட்ட வேண்டிய மனிதாபிமான கருணைச் செயல் – சாதனை இது!
****
கேள்வி 9: “நீதித்துறையில் ஊழல், தவறான நடத்தைகள் ஒட்டுமொத்த அமைப்பின் நேர்மையின் மீதான நம்பிக்கையை சிதைக்கும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் வெளிப்படையாகப் பேசியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம் அல்லவா?
– கி. துரைராஜ், கிண்டி.
பதில் 9: பாராட்டப்பட வேண்டியதே! தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் ஒரு சீரிய பகுத்தறிவாளர்; புத்த நெறியாளர். அவரது அறிவிப்புகள் அத்தனையும் மிக மிக சிறப்பானவை.
அவருக்கு இப்பதவிக் காலம் 6 மாதங்களில் முடிவடையவிருக்கிறதே என்பதுதான் முற்போக்காளர்களுக்கு வருத்தம்.
****
கேள்வி 10: திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம் என்றும், ஸநாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
– ச. திருநாவுக்கரசு, திருநெல்வேலி.
பதில் 10: ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் ஆர்.என்.ரவி என்ற ஆளுநருக்கு எத்தனை முறை இடித்துச் சொன்னாலும் விளங்கவே விளங்காது!
ஆணவக்குரலா? அறியாமையா? அல்லது விளம்பர வியாதியா? புரியவில்லை!
மக்கள் புறக்கணிப்பு தொடர்ந்தும் புத்தி கொள்முதல் இல்லையே என்ன செய்ய?