புதுடில்லி, மே 7– ஜாதிவாரி கணக் கெடுப்புக்கான கால அட்டவணை மற்றும் விவரங்களை அறிவிக்குமாறு ஒன்றிய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதைத்தொடர்ந்து அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
எனினும் எப்போது இந்த கணக் கெடுப்பு நடத்தப்படும்? என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இடஒதுக்கீடு
இந்த விவரங்களை வெளியி டுமாறு காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசை வலி யுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் எஸ்.சி., ஓ.பி.சி. மற்றும் ஆதிவாசி காங் கிரஸ் பிரிவு தலைவர்கள் நேற்று (5.5.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மன்மோகன் சிங் பிரதமராகவும், அர்ஜுன் சிங் கல்வி அமைச்சராகவும் இருந்தபோது தனியார் கல்வி நிறுவனங் களில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் 93-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் பிரிவு 15(5) நிறைவேற்றப்பட்டது.
இதன்படி அரசு கல்வி நிறுவ னங்களில் இந்த இடஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில் தனியார் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
எனினும் 2014 ஜனவரியில் மேற்படி பிரிவினருக்கு தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய் தது. ஆனால் அதைத் தொடர்ந்து தேர்தல் நடந்து புதிய அரசு அமைந்த தால் மீண்டும் பழையநிலையே தொடர்கிறது.
50 சதவீத உச்சவரம்பு
தனியார் நிறுவனங்களில் மேற்படி இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஜாதி அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டபோதும், தனிசட்டம் தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு இதற்காக எதையும் செய்யவில்லை. எனவே தனியார் கல்வி நிறுவனங்களில் மேற்படி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும்.
50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு சமூக நீதிக்கான மிகப் பெரும் தடையாக இருக்கிறது. இதை தகர்க்க காங்கிரஸ் விரும்புகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வழங்கி அதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்தது. இதன் மூலம் 50 சதவீத உச்சவரம்பை கடக்க முடியும் என்பது தெளிவாகிறது. பொது பிரிவினருக்காக பா.ஜனதா இதை செய்ய முடியும் என்றால் ஏன் தாழ்த்தப் பட்டவர்களுக்கும், பின்தங்கியவர் களுக்கும் அதை செய்ய முடியாது?
முழுவடிவமும்
மோடி அரசு ஜாதிவாரி கணக் கெடுப்பை அறிவித்துள்ளது. ஆனால் அதன் முழுமையான காலக்கெடு வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அத்துடன், ஜாதி வாரி கணக்கெடுப்பின் முழு வடிவமும், விவரங்களும் விவாதிக்கப்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள், பின் தங்கியவர்களின் குரல் வலுவாக எழுப்பப்படாதவரை சமூக நீதியை பெற முடியாது என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இன்று பா.ஜனதாவும், நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு அடி பணிந்து இருக்கிறது.
பிரதமர் மோடி பல்டி
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அவர் வலியுறுத்திய போது பா.ஜனதா தலைவர்கள் அவரைப்பார்த்து கேள்வி எழுப்பினார்கள். ஜாதி என்பது ஒரு பாவம் எனவும், நகர்ப்புற நக்சல் மனநிலை என்றும் பிரதமர் மோடியும் கூறி வந்தார். வெறும் 4 ஜாதிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் தற்போது அவர் பல்டி அடித்துள்ளார். ஏனெனில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒரு மிகப்பெரிய புரட்சி என்பதை அவர் உணர்ந்து கொண் டுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பா.ஜனதா அரசின் செயல்திட்டம் என்ன? கால அட்டவணை என்ன? விவரங்கள் என்ன? என்பதை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.