மும்பை, ஜூலை 24 பாதியில் கைவிடப் பட்ட எல்.அய்.சி பாலிசிகள் மற்றும் செயலற்ற இ.பி.எஃப். கணக்குகளில் ரூ.16,649 கோடிக்கும் அதிகமான தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதில் இருக்கும் பணத்தை திரும்பப் பெற அதாவது நிலுவைத் தொகையை பெறுவதற்கு முந்தைய காப்பீடு அல்லது வருங்கால வைப்பு நிதி தொடர்பான ஏதேனும் ஆவணங்களுடன் வாடிக்கையாளர்கள், கே.ஒய்.சி. சரிபார்த்து அவர்களது தொடர்பு விவரங்களைப் புதுப்பித்து, கணக்குத் தொடர்பான அதிகாரப்பூர்வ நினைவூட்டல்களுக்கு உரிய வகையில் பதிலளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு பணிமாற்றம் செய்தபோது வருங்கால வைப்பு நிதி கணக்கை தொடராமல் விட்டிருந்தாலோ, பழைய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பாதியில் நிறுத்தியிருந்தாலோ, அந்த ஆவணங்களை தூசி தட்டி எடுக்கும் நேரம் வந்துவிட்டது.
ஆயிரக்கணக்கான ஆயுள் காப்பீட்டு தாரர்களும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் களும் தங்களுக்குச் சேர வேண் டிய தொகையை கோராமல், கோருவது எப்படி என்று தெரியாமல்,ரூ.16,649.06 கோடிக்கும் அதிகமான தொகை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமும் (LIC), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளிலும் தேங்கிக் கிடப்பதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளது.
ஜூலை 20ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மார்ச் 31 நிலவரப்படி எல்அய்சி நிறுவனத்திடம் ரூ.7,318.50 கோடியும், செயல்பாட்டில் இல்லாத வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் ரூ.9,330.56 கோடியும் இருப்பதாகத் தெரிவித்தார்.
உங்கள் பணம் இதில் இருந்தால்
என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்ய வேண்டும்?
எல்அய்சியில் தங்களுக்கோ, பெற்றோருக்கோ உரிமை கோரப்படாத பணம் உள்ளதா என்பதை சரிபார்கக் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எல்அய்சி காப்பீட்டுதாரர்கள் தங்கள் பிறந்த தேதி மற்றும் பெயர் அல்லது பான் (PAN) எண்ணை உள்ளிடுவதன் மூலம், எல்அய்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in வழியாக, தங்களுக்குச் சேர வேண்டிய உரிமை கோரப்படாத தொகை ஏதேனும் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளலாம். மறுபக்கம், எல்சிஅய் நிறுவனமும், காப்பீடுதாரர்களின் தொடர்பு முகவரி அல்லது கைப்பேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், கோரப்படாத பணத்தை வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கும் வகையில், அதற்கான ஆவணங்கள், வங்கி விவரங்கள கோரப்பட்டுள்ளன. ஆனால், காப்பீட்டாளர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், எல்அய்சி முகவர்கள், பீமா சகி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடன் தொகையை திரட்ட எவ்வாறு வீடு தேடி செல்வோமோ அது போல தொகையை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக எல்அய்சி கூறுகிறது.
வருங்கால வைப்புத் தொகை இருந்தால்?
கைவிடப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு வைக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,000 அல்லது அதற்குக் குறைவான கோரப்படாத தொகையைக் கொண்ட, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட வருங்கால வைப்புத் தொகைக் கணக்குகளில், உள்ள பணத்தை நேரடியாக வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் சேர்க்கும் முன்னோடித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாம். அது நடைமுறைக்கு வரும்போது அது குறித்து அறிவிக்கப்படுமாம்.
இப்படியே எத்தனை ஆண்டுகள் பணம் நிலுவையில் வைக்கப்படும்?
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) விதிமுறைகளின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாமல் இருக்கும் காப்பீட்டுப் பணம் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகளைப் பொறுத்தவரை, வேறு பயன்பாட்டுக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
