சென்னை, ஏப்.24- அரசு ஊழியர்களின் பழைய ஓய்வுதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
சட்டப்பேரவையில், 22.4.2025 அன்று கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–
மரகதம் குமரவேல்: பழைய ஓய்வூதியத் திட்டம் நிறை வேற்றப்படுமா என்பதைத் அறிய விரும்புகின்றேன். இலட்சக்கணக்கான தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உங்கள்மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்து அமைச்சரவையில் அமர வைத்துள்ளார்கள். அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அரசு ஊழியர்கள்
அமைச்சர் தங்கம் தென்னரசு: உள்ளபடியே நம்முடைய முதலமைச்சர், அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள். அந்த வகையில் ஊழியர்களின் கோரிக்கையை அரசு மிகுந்த கவனத்தோடு பரிசீலித்திருக்கிறது.
நிதிநிலை அறிக்கையில்கூட அரசு ஊழியர்களுக்குத் தேவையான அந்த அறிவிப்புகளை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய அளவிலே நான் வெளியிட் டிருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கு பல கோரிக்கைகள் இருக்கின்றன.
உரிய நேரத்தில் சரியான முடிவு
ஓய்வூதியத்தைப் பொறுத்த வரையில், தற்போது அரசு ஒரு குழுவை நியமித்திருக்கிறது. கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிற்கான terms of reference காலவரையறைகள் தரப்பட்டிருக்கிறது.
அந்தக் குழுவை குறித்தும்கூட பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் அரசுக்கு பல கருத்துகளை தந்திருக்கிறார்கள். பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்களும், நானும் அவரிடத்திலே பல முறை பேசியிருக்கிறோம்.
எனவே, அரசும் முதலமைச்சர் அவர்களும் அனைத்து கோரிக்கை களையும் மிகுந்த கவனத்தோடு அரசு தன்னுடைய கருத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது.
அது சம்பந்தமாக, நான் முதலமைச்சர் அவர்களோடு பேசி, அவர்கள் கேட்டிருக்கக்கூடிய கோரிக்கை பற்றி அந்தக் குழுவிலும் விவாதித்து, அதுகுறித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.