ஒரு மருந்து ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், எப்படி உலகம் முழுவதற்கும் தேவைப்படுகின்றதோ – அதுபோன்றே,
தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும் உலகம் முழுவதற்கும் தேவைப்படும் சமத்துவத் தலைவர்கள்!
மதவெறி தலைதூக்கப் பார்க்கும் இந்தக் காலகட்டத்தில் – இத்தலைவர்களை எங்கெங்கும் கொண்டு செல்வோம்!
தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும் உலகம் முழுவதற்கும் தேவைப்படும் சமத்துவத் தலைவர்கள்!
மதவெறி தலைதூக்கப் பார்க்கும் இந்தக் காலகட்டத்தில் – இத்தலைவர்களை எங்கெங்கும் கொண்டு செல்வோம்!
கும்பகோணம், ஏப்.14 தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தமிழ்நாட்டில், மராட்டியத்தில் பிறந்தி ருந்தாலும், அவர்கள் இருவரும் உலகத் தலைவர்கள் – இருவரின் சமத்துவக் கொள்கைகளும் உலகிற்கே தேவைப்படுபவை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கும்பகோணம்: அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை
நேற்று (13.4.2025) கும்பகோணத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நுழைவாயிலில் புதுப்பிக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தந்தை பெரியார் சிலையை
திராவிட இயக்கத்தையும் – விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையும் பிரிக்க முடியாது!
சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி. திறந்து வைத்தார். இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இதே இடத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குடந்தை மாநகரில், சமூகநீதிப் புரட்சிக்கான அருமையான ஒரு விழா. இங்கே மிகவும் சிறப்பாக ஏற்கெனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போக்குவரத்துக் கழக நுழைவுவாயிலில், நம்முடைய தோழர்கள் குருசாமி போன்றவர்கள், அன்றைக்கு அய்.என்.டி.யு.சி. முயற்சி என்று சொன்னாலும், தோழர்கள் சோழபுரம் கலியன் போன்றவர்கள் எல்லோரும் முயற்சி எடுத்து சிலை வைக்க ஏற்பாடு செய்தனர்.
அஞ்சாநெஞ்சன், கொள்கை வீரர்!
இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களுடைய சிலையை எனது அருமைச் சகோதரர், இன்றைக்கு யாரைக் கண்டால் பழைமை உலகம், ஸநாதன உலகம் மிகப்பெரிய அளவிற்குப் பயப்படுமோ, அஞ்சி நடுங்குமோ அப்படிப்பட்ட ஓர் அஞ்சாநெஞ்சன், கொள்கை வீரர் நம்முடைய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன் அவர்களை அழைத்துத் திறந்து வைத்திருக்கின்றனர்.
செயல்வீரர் சாக்கோட்டை க.அன்பழகன்
அதேபோல, புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை புதுப்பித்து புதிய பொலிவோடும், வலிவோடும் சிறப்பாக செய்திருக்கிறார் சட்டப்பேரவை உறுப்பி னரும், நம்முடைய குடும்பத்து உறுப்பினருமான செயல்வீரருமான சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களாவார்கள்.
இங்கே தந்தை பெரியார் அவர்களின் சிலையை, திராவிடர் கழகத் தோழர்கள் மிக முக்கியமாக முயற்சி எடுத்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தனர்.
1990 ஆம் ஆண்டு, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்..
இங்கே கல்வெட்டில் இருக்கக்கூடிய ஒரு பழைய செய்தி – சோழன் போக்குவரத்துக் கழகத்தில் இருந்த பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 7.3.1990 ஆம் ஆண்டு குருசாமி போன்றவர்கள், சோழபுரம் கலியன் போன்றவர்கள் முயற்சியால் அமைக்கப்பட்டது.
என்றைக்கும் இந்தக் கொள்கையை யாரும் அழித்துவிட முடியாது!
இங்கே சோழபுரம் கலியன் மேடையில் அமர்ந்தி ருக்கின்றார். 30 ஆண்டுகளுக்குப்பிறகு தந்தை பெரியார் சிலையைப் புதுப்பித்து இருக்கின்றோம். என்றைக்கும் எங்களை ஒழித்துவிட முடியாது; என்றைக்கும் இந்தக் கொள்கையை யாரும் அழித்துவிட முடியாது.
பெரியார் கொள்கையானாலும், அம்பேத்கர் கொள்கையானாலும் ஆயிரங்காலத்துப் பயிர் – இதை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.
இதுதான் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான தேவையான மாமருந்து.
பெரியாரும், அம்பேத்கரும்
உலகத் தலைவர்கள்!
உலகத் தலைவர்கள்!
இரண்டு தலைவர்களும் உலகத் தலைவர்கள். பெரியாரும் தமிழ்நாட்டுத் தலைவர் அல்ல; அம்பேத்கரும் அகில இந்திய தலைவர் அல்ல. அதற்கு உதாரணத்திற்கு வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை.
ஆஸ்திரேலியாவில் நான், மூன்று வார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு முன்புதான் வந்தேன்.
ஆஸ்திரேலியாவில் ‘‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம்’’
அங்கே பல முக்கிய நகரங்களுக்கெல்லாம் சென்று பார்த்தேன். கூட்டம் நடத்தினார்கள்; பெரு மளவில் தோழர்கள் வந்தார்கள். சிட்னி பகுதியில் தொடங்கி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்ன், கோல்டுகோஸ்ட் பகுதிகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றேன்.
ஆஸ்திரேலிய கண்டத்தில் அமைக்கப்பட்டி ருக்கின்ற அமைப்பின் பெயர், ‘‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம்’’ என்பது.
எல்லா நாடுகளிலும் பெரியாரும், அம்பேத்கரும் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்!
ஏற்கெனவே, அய்ரோப்பா கண்டத்தில் இருக்கிறது; அமெரிக்காவில் இருக்கிறது; இங்கிலாந்தில் இருக்கிறது. அரபு நாடு களிலும் இருக்கிறது. எல்லா நாடுகளிலும் பெரியாரும், அம்பேத்கரும் இருக்கிறார்கள் என்று சொன்னால், எல்லா நாட்டிலும் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள்; நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். சமூகநீதிக்கு அதற்குரிய வாய்ப்புகளைப் பெறக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதனுடைய அடையாளம்.
இங்கு, நம்முடைய சகோதரர் அன்பு அவர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். புதிய வலிவோடும், பொலி வோடும் அமைக்கப்பட்டிருக்கின்ற இரண்டு சிலைகளும், வெறும் சிலைகள் அல்ல; சீலங்கள்!
ஆரியம் நடுங்குகிறது;
ஸநாதனம் அச்சப்படுகிறது!
ஸநாதனம் அச்சப்படுகிறது!
பெரியாரும், அம்பேத்கரும் உடலால் மறைந்து பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால், இன்றைக்கு அவர்களுடைய படத்தைப் பார்த்தாலே ஆரியம் நடுங்குகிறது; ஸநாதனம் அச்சப்படு
கிறது.
ஆகவேதான், எந்தத் தலைவருக்கும் இதுபோன்ற ஆற்றல் கிடையாது. இன்னுங்கேட்டால், ‘சர்வ சக்தி’ வாய்ந்தவர் என்று சொல்லக்கூடிய கடவுள்களையே திருடிக் கொண்டு போகின்ற சூழல் இருக்கிறது. ஆனால், இவர்களை யாரும் நெருங்க முடியாது.
அணைத்துப் பார்ப்போம் என்று, அம்பேத்கரை நெருங்கியிருக்கிறார்கள்!
இவர்களை அசைத்துப் பார்த்தார்கள், அசைக்க முடியவில்லை. ஆகவே, அணைத்துப் பார்ப்போம் என்று, அம்பேத்கரை நெருங்கியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த நெருக்கம், அம்பேத்கரை அணைத்து அழித்திட இடங்கொடுக்கமாட்டோம் என்று சொல்வதற்குத்தான், எங்கள் எழுச்சித் தமிழர் போன்ற சகோதரர்கள் தங்களுடைய கொள்கை முழக்கத்தை எழுப்பியிருக்கிறார்கள்.
ஏன், மற்றவர்களைவிட எழுச்சித் தமிழர் போன்ற வர்கள் இவ்வளவு உற்சாகத்தோடு இருக்கிறார்கள்?
பெரியார் வேறு அல்ல; அம்பேத்கர் வேறு அல்ல; அதைத்தான் இன்றைக்கு விழா நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்!
இரண்டு பக்கங்கள்!
பெரியாருடைய சிலையை, எழுச்சித் தமிழர் திறந்து வைக்கிறார்; அம்பேத்கர் சிலையை, நான் திறந்து வைக்கிறேன் என்று சொன்னால், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஏற்கெனவே நாங்கள் பல நேரங்களில் சொல்லியிருக்கின்றோம்; நம்முடைய போக்குவரத்துத் துறை அமைச்சர், பெரும் சாதனைக்குரிய போக்குவரத்துத் துறை அமைச்சர், நம்முடைய குடும்பத்துப் பிள்ளைகள் அவர்களெல்லாம். அப்படிப்பட்டவர்களின் முன்னிலையில், இவ்விழா நடைபெறுகிறது. அதுபோல, ஏராளமான தோழர்கள், எல்லா இயக்கங்களையும் சார்ந்தவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
இன்றைக்கு பெரியார் – அம்பேத்கர் ஏன் தேவை?
ஒரு மருந்து, ஓரிடத்தில் ஒரு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், அது உலகம் முழுவதும் உள்ள நோயைப் போக்கப் பயன்படுகிறது. உலகம் முழுவதும் அந்த மாமருந்து பயன்படுகிறது.
அதுபோல, மகாராட்டிரத்தில் அம்பேத்கர் அவர்கள் பிறந்திருக்கலாம்; தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்திருக்கலாம். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியிருக்கலாம்.
உங்களுக்கு ஒரு தகவலைச் சொல்கிறேன். இந்த ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் என்று சொன்னால், அம்பேத்கர் அவர்கள் தேவைப்படுகிறார். அதற்கு எங்களைப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேரங்களில் தூக்கி எறியக்கூடியதுதான் ஆரியத்தி னுடைய புத்தி; ஸநாதனத்தினுடைய கைங்கர்யம் என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
பெரியார், அம்பேத்கர் தத்துவங்கள்தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடியதாகும்
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த இருபெரும் தலைவர்களுடைய தத்து வங்கள்தான், இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்ற மதவெறி, ஜாதிவெறி, தீண்டாமை வெறி, மூடநம்பிக்கை வெறி, பெண்ணடிமை வெறி இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்டுவதற்கு மேற்கொண்ட இரு தலைவர்களுடைய தத்துவங்கள்தான் தீர்வு. இந்தத் தத்துவங்கள்தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடியதாகும்.
இங்கே நாம் ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டி ருக்கின்ற ஜாதி, வர்ணாசிரம தர்மம், ஸநாத னத்தின்மூலமாகப் பரப்பப்படுகின்ற கொடுமைகள் இங்கே மட்டுமல்ல, இங்கே இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றும், வருணாசிரம தர்மத்தை உண்டாக்குகிறார்கள். அவற்றை எதிர்த்துத்தான் இப்போது முழக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியில், சட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக சமூகநீதியை உண்டாக்குகிறார்கள்.
சாதனைக்கு மேல் சாதனை செய்து சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர்!
நாளைய தினம் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அதைத்தான் நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ முதலமைச்சர், இந்தியாவிலேயே சாதனைக்கு மேல் சாதனை செய்து சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்ற நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓர் அறிவிப்பைக் கொடுத்தார்.
பெரியாருடைய பிறந்த நாள் விழா – சமூகநீதி நாள்.
டாக்டர் அம்பேத்கருடைய பிறந்த நாள் விழா – சமத்துவ நாள் என்று அறிவித்து, அன்று எல்லோரும் உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று அறிவித்தார்.
சமூகநீதியும், சமத்துவமும் எல்லோருக்கும் தேவை!
எனவே, சமூகநீதியும், சமத்துவமும் எல்லோ ருக்கும் தேவை. எல்லா நாட்டினருக்கும் தேவை. எல்லா சமூகத்தினருக்கும் தேவை.
யாரையும் வெறுப்பதல்ல; யாரையும் தடுப்பதல்ல சமூகநீதியும், சமத்துவமும்!
எல்லோரும் ஒன்றாக இருக்கவேண்டும்; எல்லாருக்கும் எல்லாமும்!
‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’
தந்தை பெரியார் இரண்டே வரிகளில் இந்தத் தத்துவங்களை விளக்கினார். ‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’ என்று.
எனவேதான், அனைவருக்கும் அனைத்தும் என்ற தத்துவங்களையெல்லாம் நாடு முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய தலைவர்கள்தான் இந்தத் தலைவர்கள்.
பெரியாருக்கும் – அம்பேத்கருக்கும் இருந்த நட்பு, இன்றைய இளைய தலைமுறையினரில் பல பேருக்குத் தெரியாது.
ஏனென்றால், இன்றைக்கு ஒரு பெரிய பரிதாபம், அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பல நூல்கள் வெளிவந்தாலும்கூட, தந்தை பெரியாரும் – அம்பேத்கரும் எப்படி ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருந்தார்கள் என்பதற்கு, பல நூல்களால் வரலாற்றில் மறைக்கப்பட்ட காரணத்தினால், எழுதப்படவில்லை.
‘‘பெரியார் – அம்பேத்கர் நட்புறவு!’’
ஒரு சிறிய செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன் – ‘‘பெரியார் – அம்பேத்கர் நட்புறவு’’ என்று அதன் காரணமாகவே, ஆதாரப்பூர்வமாக இந்த நூலை, சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வரலாறு என்று குறிப்பிட்டேன்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டினை இந்த ஆண்டு கொண்டாடுகின்றோம். முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டினை 1929 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் அவர்கள் செங்கற்பட்டில் நடத்தினார்.
எல்லோருக்கும்
சுயமரியாதை தேவை!
சுயமரியாதை தேவை!
அதேகாலகட்டத்தில், சில மாதங்கள் தள்ளி, பம்பாய், மகாராட்டிரத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் கலந்துகொண்டு, நாசிக்கில் இந்த மாநாட்டினை நடத்தியிருக்கிறார். எல்லோருக்கும் சுயமரியாதை தேவை; சுயமரியாதை இயக்கம் தென்னாட்டில் பிறந்தாலும், அது எந்நாட்டவருக்கும் தேவைப்படக்கூடிய ஒன்று என்று தொலைநோக்கோடு அம்பேத்கர் அவர்கள் சொன்னதை அந்த நூலில் பதிவு செய்திருக்கின்றோம்.
அதேபோல இன்னொன்று, இந்தியாவிலேயே, தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் இருந்த நெருங்கிய கொள்கை உறவு என்பது மிக இறுக்கமானதாகும்.
எங்களுடைய கொள்கை –
நட்புறவும் அப்படித்தான்!
நட்புறவும் அப்படித்தான்!
அன்றைக்கு அந்தக் கொள்கை உறவு எவ்வளவு இறுக்கமானதாக இருந்ததோ, பிரிக்க முடியாத அளவிற்கு இறுதிவரை இருந்ததோ – அதுபோலதான், எங்களுடைய கொள்கை நட்புறவு!
திராவிடர் இயக்கமானாலும், நம்முடைய எழுச்சித் தமிழருடைய நிலைப்பாடானாலும், எங்களைப் பிரிக்க முடியாது. யாரும் எங்களை விலைக்கு வாங்கிவிட முடியாது. அவர்களால், இந்தக் கூட்டணியை உடைக்க முடியாது.
ஆயிரம் அமித்ஷாக்கள் வரலாம்; அதுதான் எங்களுக்கு உரம் போடும்; அதுதான் எங்களுடைய வெற்றியை விரைவுபடுத்தும். அதனைப் புரிந்த வர்கள்தான் நாங்கள்.
எனவே, ‘‘அவர் வருவார், இவர் வருவார், இவர் பேசுவார், அவர் பேசுவார்’’ என்றெல்லாம் யூகம் செய்து பார்த்து, அவர்கள் களைத்துவிட்டார்கள்.
ஓங்கி மண்டையில் அடிப்பதுபோன்று சொன்னார் நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்கள்.
உங்களுடைய வியாக்கியானங்கள் இனிமேல் செல்லுபடியாகாது!
இவர் திரும்பினாலும் ஒரு அர்த்தத்தைக் கற்பித்தார்கள்; அவர் தும்மினால் ஓர் அர்த்தத்தைக் கற்பித்தார்கள். அவர் வந்துவிடுவார்; இவர் வந்து விடுவார், தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் என்றெல்லாம் வியாக்கியானம் செய்பவர்களே, இனிமேல் உங்களுடைய வியாக்கியானங்கள் செல்லுபடியாகாது.
இதுவரையில் நடந்ததெல்லாம் ஒத்திகைதான். இனிமேல்தான் முழு நாடகம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முதல் அச்சாரம்தான், இப்போது ஆளுநரை வெளியேற்றப்படக்கூடிய அளவிற்கு உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய தீர்ப்பாகும்.
ஆளுநரை, தமிழ்நாட்டை விட்டே வெளியேற்றக்கூடிய மிகப்பெரிய
ஓர் ஆர்ப்பாட்டம் – கிளர்ச்சி!
ஓர் ஆர்ப்பாட்டம் – கிளர்ச்சி!
அதன் காரணமாகத்தான் அவர், பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கல்வித் துறையில் இருந்து வெளி யேற்றப்பட்டு இருக்கிறார்; சட்டப்பூர்வமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இன்னும் தமிழ்நாட்டை விட்டே வெளியேற்றக்கூடிய மிகப்பெரிய ஓர் ஆர்ப்பாட்டத்தை, கிளர்ச்சியை எங்களைப் போன்றவர்கள், தோழர் திருமா போன்றவர்கள் நிச்சயமாகச் செய்வோம்.
இதுவரையில் அமைதியாக இருந்து விட்டது தமிழ்நாடு என்று நினைக்காதீர்கள். அடுத்தபடியாக, வெளியேற்ற வேண்டிய வர்களை வெளியேற்றுவோம், சட்டப்பூர்வமாக.
அதுவும் பதவியில் இருப்பதற்குத் தகுதியில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும்கூட, மீண்டும் மீண்டும் பதவியில் இருப்பது; கல்லூரிகளுக்குச் சென்று ‘ஜெய் சிறீராம்’ கோஷம் போடுவது; மதக்கலவரத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்குவது; ஜாதிக் கலவரத்திற்கு, தீண்டாமை முயற்சிகளுக்கு ஊக்கம் காட்டுவது – இப்படிப்பட்டவை நடக்காது என்பதற்கான அறிகுறிதான், இந்த சிலைத் திறப்பு விழாவும், இங்கே திரண்டிருக்கின்ற லட்சக்கணக்கான மக்களும்.
இவர்கள் வெறும் சிலையல்ல; சீலம்! எதிரிகளுக்கு ஓர் எச்சரிக்கை!!
எனவேதான் புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே, இவர்கள் வெறும் சிலைகள் அல்ல; சீலம். எதிரி களுக்கு ஓர் எச்சரிக்கை!
இவர்களுடைய கொள்கையை எவரும் தொடக்கூட முடியாது. மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் இன்னும் பல ஆண்டுகளுக்கு – இன்னும் ஓர் அரை நூற்றாண்டுக்கு என்பதற்கு அடையாளம்.
பெரியார் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக்
கொண்டிருக்கின்ற ஆட்சி!
கொண்டிருக்கின்ற ஆட்சி!
ஏனென்றால், இந்த ஆட்சிதான், பெரியாரைப் போற்றுகின்ற ஆட்சி. போற்றுவது மட்டுமல்ல, பெரியார் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஆட்சி.
எனவே, இந்த ஆட்சியைப் பலப்படுத்துவோம். அதுபோலதான் அம்பேத்கர்.
அம்பேத்கருக்கு இந்த நாட்டில், அவர் பிறந்த மண்ணில்கூட, அவர் பெயரில் கல்லூரி தொடங்கவில்லை. அவர் பெயரில் முதன்முதலாக கல்லூரியைத் தொடங்கிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையே சாரும். தமிழ்நாட்டையே சாரும். திராவிட இயக்கத்தையே சாரும்.
நான்கைந்து முறை, அம்பேத்கரை பெரியார் சந்தித்திருக்கிறார்; பெரியாரை, அம்பேத்கர் சந்தித்தி ருக்கிறார். அகில இந்திய தலைவர்களில் வேறு எந்தத் தலைவர்களுக்கும் இவ்வளவு நெருக்கம் கிடையாது.
எனவே, இப்படிப்பட்ட இருவரை, இங்கு சோழன் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக நிறு வப்பட்ட சிலைகளைப் புதுப்பித்து, இங்கே திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.
கொள்கைகளும் இன்று
உறுதி பெறுகின்றன!
உறுதி பெறுகின்றன!
தத்துவ ரீதியாகப் பார்த்தால், பழைய சிலை இருக்கிறது; ஆனால், புதிய சிலை அதைவிட வலிைமயாகவும், பொலிவாகவும் மற்ற சகோதரர்களால், குறிப்பாக அன்பழகன் போன்ற வர்களுடைய முயற்சியால் நடக்கிறது என்றால், அதற்கு என்ன பொருள் என்றால், வெறும் சிலை மட்டும் புதுப்பிக்கப்படவில்லை நண்பர்களே, சிலை மட்டும் இந்தக் கொள்கைகளால் புதுப்பிக்கப்படவில்லை. பெரியாரோ, அம்பேத்கரோ சிலையாக நின்று அசையாமல் இல்லை. இந்தக் கொள்கைகளும் இன்று உறுதி பெறுகின்றன. கொள்கைகளும் வேகமாக உலகெங்கும் செல்லுகின்றன.
புல்டோசருக்குமுன் நின்றவர்கள் போலாகும்!
இந்தக் கொள்கைகளுக்குமுன் குறுக்கே எவர் நின்றாலும், புல்டோசருக்குமுன் நின்றவர்கள் போலாகும்.
புல்டோசர் என்று சொல்லும்போது, உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஆட்சிதான் உங்கள் நினைவிற்கு வரும்.
ஆகவேதான், அந்த உதாரணத்தைக்கூட நான் சொல்வதற்குத் தயாராக இல்லை.
இன எதிரிகளுக்கு பகிரங்கமாக விடுக்கின்ற சவால்கள்!
எங்களை எதிர்க்கின்றவர்கள், கொள்கை எதிரிகள் யாராக இருந்தாலும், பெரியாரும் – அம்பேத்கரும் கலங்கரை விளக்கங்கள். அவரது கொள்கைகள், இன எதிரிகளுக்கு பகிரங்கமாக விடுக்கின்ற சவால்கள்.
எனவேதான், பெரியார் அம்பேத்கர் சிலைகள் என்பது கொள்கைச் சீலங்கள். இவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதற்காக, என்னுடைய அருமைச் சகோதரர் பெரியார் சிலையைத் திறக்கிறார். நான் அம்பேத்கர் சிலையைத் திறக்கிறேன்.
திராவிட இயக்கத்தையும் –
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையும் பிரிக்க முடியாது!
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையும் பிரிக்க முடியாது!
இரண்டு பேரும் ஒன்றுதான். எப்படி, பெரியா ரையும் – அம்பேத்கரையும் பிரிக்க முடியாதோ, அப்படித்தான், திராவிட இயக்கத்தையும் – விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையும் பிரிக்க முடியாது.
ஏனென்றால், நான் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இது மூன்றாவது குழல் என்பதை மீண்டும் மீண்டும் இந்த நேரத்தில் சொல்கிறேன். இந்த மூன்று குழல்களிடமும் இன எதிரிகளான நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள்.
எனவே உங்கள் வால் அறுக்கப்படும். உங்களு டைய ஆதிக்கம் இடையிலேயே முடிக்கப்படும். அதற்கான எச்சரிக்கை நாள்தான் இன்று!
கொள்கை அறப்போர் பிரகடன நாள்!
இது வெறும் சிலை திறப்பு நாளல்ல. இது ஒரு கொள்கை முழக்க நாள்! கொள்கை அறப்போர் பிரகடன நாள் என்பதை எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!
இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், ஒத்துழைத்த தோழர்களுக்கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள், தி.மு.க. தோழர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சித் தோழர்களானாலும், அதற்கப்பாற்பட்ட தோழர்களானாலும் எல்லோருக்கும் நன்றி! எல்லோருக்கும் வாழ்த்துகள்!
இது ஒரு வரலாற்று நினைவு நாள்!
நல்ல தொடக்கம்,
நீடிக்கட்டும்!
நீடிக்கட்டும்!
நாளை, அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள்.
சமத்துவ நாளாகக் கொண்டாடப்படுவதற்கு முன், முதல் நாள் அச்சார நாள் இது.
முதல் நாள் தொடக்க நாள். எனவே, நல்ல தொடக்கம், நீடிக்கட்டும்!
இந்தப் புரட்சி வெடிக்கட்டும்! புரட்சி என்பது சமூகப் புரட்சியாகும்!
இங்கே ஜாதிக்கு இடமில்லை!
தீண்டாமைக்கு இடமில்லை!
மதவெறிக்கு இடமில்லை!
பெண்ணடிமைக்கு இடமில்லை என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.