பாட்னா, ஏப். 6- வக்பு சட்ட திருத்த மசோதாவை ஏற்க மறுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பீகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை ஏற்கமாட்டோம், அமல்படுத்த மாட்டோம் என்று எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பீகார் துணை முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா கூறியதாவது:
வக்பு சட்ட திருத்த மசோதாவை ஏற்க மறுத்தால், அமல்படுத்த மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இது பாகிஸ்தான் கிடையாது, இந்துஸ்தான். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதை ஏற்க மறுப்பவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்படுவார்கள். அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுதான் பிஜேபி ஆட்சி!
2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: அரியானா சிறையின் அவலநிலை!
பதேஹாபாத், ஏப். 6- அரியானாவில் உள்ள சிறையில் 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஒரே மருத்துவர் என்ற நிலை உள்ளது. அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள போன்ட்சி சிறையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணா கோயல் ஆய்வு நடத்தச் சென்றார்.
இந்த ஆய்வில் அங்குள்ள 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்க்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அந்தச் சிறையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் கைதிகள் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.மேலும், பெண் கைதிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பெண் மருத்துவர் கூட இல்லாதது உடல்நலக் கோளாறால் அவதிப்படும் பெண் கைதிகளின் நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
மருத்துவர்களின் போதாமை பற்றி ஒப்புக் கொண்ட சிறைத்துறை அதிகாரிகள் மூன்று மருத்துவ அதிகாரிகளுக்கான இடத்தில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் நோய்வாய்ப் பட்ட கைதிகளை குருகிராமில் உள்ள பொது மருத்துவ மனைக்கு அவர் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.