அலகாபாத், ஏப். 6- டில்லி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரகசியமாக பதவியேற்றதாக வழக்குரைஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் கடந்த மாதம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டில்லியில் உள்ள அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து மூலம் இது அம்பலமானது.
இது தொடர்பான விசாரணைக் காக 3 நீதிபதிகளை கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார்.
அதேநேரம் நீதிபதி யஷ் வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இதற்கு அலகாபாத் வழக்குரைஞர் சங்கம் உள்பட பல்வேறு மாநில வழக்குரைஞர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தன.
இந்த இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியம் உறுப்பினர்களையும் சந்தித்து வழக்குரைஞர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர் மேலும் இதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட் டனர். ஆனாலும் நீதிபதி யஷ் வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றும் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு கடந்தமாதம் ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நேற்று (5.4.2025) அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று உள்ளார். தலைமை நீதிபதியின் அறையில் நடந்த எளிய நிகழ்ச்சியில், அவ ருக்கு தலைமை நீதிபதி அருண் பன்சாலி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு மிகவும் ரகசியமாக நடந்து இருப்பதாக அலகாபாத் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. தங்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்காமல் இந்த பதவியேற்பு நடந்திருப்பதாகவும், இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்து இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி அருண் பன்சாலிக்கு அலகாபாத் வழக்குரைஞர் சங்க செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு ரகசியமான முறையில் பதவிப்பிர மாணம் செய்து வைத்திருப்பது ஒட்டுமொத்த வழக்குரைஞர் சங்கத்துக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த இட மாற்றத்தை எதிர்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நாங்கள் முறையிட்டபோது. நீதித் துறையின் கண்ணியத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித் தார்.
அதன் மூலம் இந்த விவகாரத்தில் நேர்மையான வெளிப்படையான நடவடிக்கைகள் இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் இந்த பதவிப்பிரமாணம் குறித்து வழக்குரைஞர் சங்கத்துக்கு அறிவிக்காதது என்பது நீதித் துறை அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண் டும் சிதைப்பதாக உள்ளது.
எங்களுக்கு தெரியாமல் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த விதத்தை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண் டிக்கிறோம்.அவருக்கு எந்தவித நிர்வாக மற்றும் சட்டப்பூர்வ பணி களை ஒதுக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.