‘வஞ்சக நரியே போற்றி!’

Viduthalai
3 Min Read

பார்ப்பனர்கள் மாநாடு கூட்டுகிறார்களே அது எதற்காக? ‘‘சமுதாயத்தில் நாங்கள் கீழ் ஜாதி, தீண்டப்படாதவர்கள், ஊருக்கு வெளியேதான் நாங்கள் வசிக்கும் நிலை உள்ளது. நாங்கள் படிக்கக் கூடாது என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள் நாங்கள்! எங்களுக்கே உத்தியோக வாய்ப்புகள் இல்லை. நாங்கள் பரம ஏழைகள், அன்றாடங் காய்ச்சிகள் – எனவே எங்களைக் காப்பாற்ற வேண்டும்; எங்களுக்கு அதிக சலுகைகளைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைப்பதற்காகவா’’ மாநாடு கூட்டுகிறார்கள்?
உண்மையிலே பார்ப்பனர்கள் பிறவியில் தாழ்ந்து கிடக்கிறார்கள் என்றால், அவர்கள் கூட்டும் மாநாடுகளில் எத்தகைய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்?

சட்டப்படி ஜாதியை – தீண்டாமையை ஒழிக்க வேண்டும்; ஜாதியைப் பாதுகாக்கின்ற சாஸ்திரங்களைத் தடை செய்ய வேண்டும்.
நாங்கள் மக்கள் தொகையில் மூன்று விழுக்காடு உள்ளவர்கள், எங்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் எங்கள் மக்கள் தொகை விகிதாசாரப்படி 3 விழுக்காடு இடங்களை சட்டப்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதானே தீர்மானம் போட வேண்டும். இந்த வகையில் தானே அவர்கள் நடத்தும் ஊர்வலங்களில் முழக்கங்களைப் போட வேண்டும்.
இந்த வகையில் ஏன் தீர்மானங்களை நிறைவேற்ற வில்லை; முழக்கங்களை ஏன் போடவில்லை?
காரணம் வெளிப்படை; இவர்கள் பிறப்பின் அடிப்படையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்; இந்தப் பூலோகத்தைப் பிராமணர்களுக்காகவே பிர்மாவானவர் படைத்தார்.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படுவான், அதில் ஒன்றுதான் விபசாரி மகன் (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8 – சுலோகம் – 415).
இப்படி சொல்லுகிற மனுதர்மத்தை இன்றளவும் போற்றுகிறவர்கள் தானே இந்தப் பார்ப்பனர்கள். இந்த ஸநாதனத்தைப் பற்றிப் பேசினால், அடேயப்பா என்று பூமிக்கும் – ஆகாயத்துக்கும் தாவித் தாவி குதிக்கிறார்களா இல்லையா?
கும்பகோணம் பார்ப்பனர் மாநாட்டில் அனுமார்களாக சேவகம் செய்த ‘சூத்திர’ தமிழர்கள் சிந்திக்க வேண்டாமா!
காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெரும் பாடுபட்டு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டும், பார்ப்பனர்கள் தங்கள் விகிதாசாரத்திற்கு மேல் இன்றும் எத்தனை மடங்கு அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்!
இந்தியா முழுவதும் 54 மத்திய பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன என்றால் அதில் ஒரே ஒரு துணைவேந்தர் மட்டும் தானே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.

ஒன்றிய அரசின் செயலாளர்கள் 90 பேர் என்றால் அதில் வெறும் மூன்று பேர்தானே பிற்படுத்தப்பட்டவர்கள். இதனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் கூறினாரே! அந்தப் புள்ளி விவரம் தவறு என்று இதுவரை அதிகாரப் பூர்வமாக மறுக்கப்பட்டதுண்டா?
கும்பகோணத்தில் மாநாடு கூட்டி, துடை தட்டிய படித்த பார்ப்பனர்கள் – ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விவரங்களை வெளியிட்டு மறுக்காதது ஏன்? – காரணம் ராகுல் காந்தி கூறியது துல்லியமானது. உண்மையானது என்பதால்தான் மறுக்க முடியவில்லை.
மன்னர்கள் காலத்திலிருந்து கல்வி என்பது சமஸ்கிருதக் கல்வி தானே – எல்லாம் பார்ப்பனர்கள் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டதுதானே?
1610ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி ராபர்ட் டீ நொபலி (Robert De Nobili) எழுதிய கடிதம் நாயக்கர் மன்னனின் கல்வியமைப்பைப் பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது. மதுரையில் பத்தாயிரம் மாணவர்களுக்கு மேல் இருக்கின்றனர். அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே!’’ (ஆதாரம்: திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் ‘ஒப்பியல் மொழி’ நூல் – பக்கம் 55)
என்ன கொடுமை – அன்று முதல் எல்லா வாய்ப்பு களையும் சுளையாய் விழுங்கி ஏப்பமிட்டு வந்த – வருகின்ற பார்ப்பனர் கூட்டம் மாநாடு கூட்டுகிறார்களாம். ‘அய்யயோ நாங்கள் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறோம் – எங்களைக் காப்பாற்ற நாதியில்லையா?’ என்ற கூப்பாடு போடுகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

‘‘வஞ்சக நரியே போற்றி!’’ என்று ஆரிய மாயை நூலில் அறிஞர் அண்ணா எழுதியவரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
ஏதோ தந்தை பெரியாரும் திராவிடர் கழகத்தினரும்தான் பார்ப்பனர்களை எதிர்க்கிறார்கள் என்பது போல ஓலமிடுகிறார்கள்.
உண்மையைச் சொல்லப் போனால் தந்தை பெரியாரோ திராவிடர் கழகமோ பார்ப்பனர்களை இழிவுபடுத்துவதில்லை – அவர்களின் ஆதிக்கத்தை நோக்கித்தான் கணை தொடுக்கிறார்கள்.
‘‘கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்து
காகத்தை யென் செயப் படைத்தாய்? என்று பாடியது விவேக சிந்தாமணி (பாடல் எண் 82) தானே தவிர ‘விடுதலை’ ஏடு இல்லையே!
இதேபோல் எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறிக் கொண்டே போகலாம் – ஏடு தாங்காது.
பார்ப்பனர்களே, ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *