சென்னை, மார்ச் 31 தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது, புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளார்.
பாதுகாப்பான பயணம்
இதன் காரணமாகவே, பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக தமிழ்நாடு அரசு ‘இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களை’ அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக 100 ‘இளஞ்சிவப்பு நிற’ ஆட்டோக்களை முதலமைச்சர் கடந்த 8.3.2025 அன்று வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுயதொழிலில் பெண்கள்!
ஒவ்வொரு இளஞ்சிவப்புநிற ஆட்டோவிலும், அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் சுயதொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகளாக, பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடி யும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மானியம்
மேலும், சென்னையில் குடியிருக்க வேண்டும் என்ற தகுதிகளின் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு குழு உறுப்பினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதற்கென தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சிஎன்ஜி/ஹைபிரிட் (CNG/Hybrid) ஆட்டோ வாங்க மானியமாக வழங்குகிறது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்கு வங்கிகளுடன் இணைக்கப்படும்.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி கூறிய தாவது:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு, ரூ.2 கோடி செலவில் 250 பிங்க் ஆட்டோ இயக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
வரவேற்பு
இத்தகைய ஆட்டோ பிங்க் நிறத்தில் இருக்கும் என்றும், பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருப்பார்கள் என்றும், அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருப்பார்கள் என்றும், மேலும் இந்த ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 பேருக்கும், 2 ஆம் கட்டமாக வரும் ஏப்.6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 150 பேருக்கும் வழங்கப்பட உள்ளது. பெண்கள் மத்தியில் பிங்க் ஆட்டோவிற்கு நிறைய வரவேற்பு கிடைத்து வருகிறது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.