புவனேஸ்வரி, மார்ச் 7 பள்ளிக் கூடங்களின் பச்சை வண்ணத்தை நீக்கி காவி வண்ணத்தைத் திணிக்கின்ற ஒடிசா மாநில பா.ஜ.க. அரசின் செயலுக்கு எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்தநிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டடங்களுக்கும் புதிய வண்ணக் குறியீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா பள்ளி கல்வித் திட்ட ஆணையம், இதுகுறித்த உதாரண படத்துடன் கூடிய சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில், பி.எம். சிறீ உள்பட அனைத்துப் பள்ளிகளின் கட்டடங்களின் நிறத்தை ஆரஞ்ச் மற்றும் பழுப்பு நிறத்துடன் கூடிய ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வியை காவிமயமாக்கும் கொடுமை
கட்டுமானம், பழுதுபார்ப்பு, புதுப்பித்தல் பணிகளின்போது அங்கீகரிக்கப்பட்ட வண்ணக் குறியீட்டை ஏற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட களப் பணியாளர்களுக்கு பொறருத்தமான வழிமுறைகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில், மாநில பாஜக அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் சீருடை நிறத்தையும் மாற்றியது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆட்சியின் (நவீன் பட்நாயக் ஆட்சி) பச்சை வண்ணம் நீக்கப்பட்டு காவி நிறத்தில் பள்ளிகள் மாற உள்ளன. பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.
ஒடிசாவில் அரசுப் பள்ளிகளுக்கு காவி வண்ணமா? பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு
Leave a Comment