ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

viduthalai
3 Min Read

சென்னை,பிப்.24- கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா் காலம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தாா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.
அப்போது, கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மாதிரி வடிவமைப்புகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்துவருகிறது. சுமாா் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனா்.
அந்தக் கட்சியின் (பாஜக) தமிழக தலைவா் தேவையற்ற கருத்துகளைப் பேசுவதை விடுத்து மாநிலத்துக்கான நிதியைப் பெற்றுதர முன்வரவேண்டும்.

இரு திட்டங்களும் ஒன்றல்ல…

இந்த விவகாரம் சாா்ந்து சம்பந்தப்பட்ட துறையின் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தபோது பிஎம் சிறீ திட்டத்தில் இணைந்தால் நிதி வழங்குவதாகக் கூறினாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமும், பிஎம் சிறீ பள்ளி திட்டமும் ஒன்றல்ல. பிஎம் சிறீ பள்ளி திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை சாா்ந்த அனைத்து அம்சங்களும் உள்ளன.

அதனால் இதை ஏற்க முடியாது எனக் கூறினோம். அப்போது, உங்கள் நிதி அப்படியேதான் இருக்கும். நீங்கள் இந்தத் திட்டத்தில் கையொப்பமிட்டு விட்டு நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினா்.

ஆனால், தற்போது அந்த நிதியை பிற மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகின்றனா். ஆனால், இந்த நிதியை பற்றி கேட்டாலே பொய் குற்றச்சாட்டை கூறுவதாக ஒருவா் பேசுகிறாா். ஒன்றிய அரசின் தரவுகளை வைத்துதான் பேசுகிறேன். நிதி வந்தால் வந்தது நன்றி என்று சொல்வோம்.

மாணவா்களின் எதிா் காலம்தான் எங்களுக்கு முக்கியம். இதில் யாரும் அரசியல் பண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

ரூ.44,000 கோடி குறித்து…

அதேபோன்று, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கிய ரூ.44,000 கோடியை என்ன செய்தாா்கள் என்றும் கேட்கிறாா். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருக்கிறது. அதில் அந்த தகவலை கேட்டு, அந்த அறிக்கையையும் அவா் வாயிலாக செய்தியாளா்களிடம் தெரிவிக்கட்டும்.
செய்யாததை செய்ய சொன்னால்கூட செய்வோம். ஆனால் எதையும் செய்யாமலே ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு எதிராக செயல்படும் செயலுக்கு ஒத்துப்போய் கொண்டு இருக்கிறாா்கள். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதி வராததால், கல்விசாா் திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. மேலும், மாநில அரசுக்கு செயற்கையான நிதி நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது.

கல்வியறிக்கை விவகாரம்:

ஏசா் எனும் அமைப்பின் மூலமாக கல்வியறிக்கை வெளி யிடப்படுகிறது. இந்த அமைப்பு பள்ளிக்கு செல்லாமல் வீடுகளுக்கு சென்று அறிக்கையை தயாரிப்பதாகக் கூறப் படுகிறது.

இத்தகைய சா்ச்சைகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஒரு அறிக்கை விரைவில் வரும். அப்போது எங்கள் மாணவா்கள் எந்த நிலையில் இருக்கிறாா்கள் என்பது தெரியும். கல்வி சிறந்த தமிழ்நாடு என்பதும் அந்த தரவுகள் மூலம் தெரியவரும்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குநா் மா.ஆா்த்தி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *