மார்ச் மாதம் செட் (SET) தேர்வு: அமைச்சர் கோவி. செழியன்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) மார்ச் 6,7,8, 9 தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்
108 ஆம்புலன்சின் இருப்பிடம் அறிய செயலி அறிமுகம்!
108 ஆம்புலன்ஸ் வருகையை துல்லியமாக அறிய ‘Avasaram 108 tamilnadu’ என்ற புதிய செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அழைப்பு வந்த 20 நிமிடங்களுக்குள் செல்வதை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது. ஒருவர் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதும் அவரது அலைபேசிக்கு ஓட்டுநர் எண், மேப்புடன் குறுஞ்செய்தி வரும். அதில், பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தையும் பகிரலாம். இதனால், ஓட்டுனர் பயனாளிகள் இருப்பிடத்தை குழப்பமின்றி வேகமாக வந்தடையலாம்.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
திருப்பரங்குன்றம் பிரச்சினைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு ? தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனக் கண்டனம் தெரிவித்தார்.
கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருவை கலைத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தொடர்ந்த வழக்கில், அவருக்கு குழந்தையை வளர்க்கும் பக்குவம் இல்லை என்று வழக்குரைஞர் வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிறுமியை கருவை கலைக்க விடாமல் செய்வது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று கூறி கருவை கலைக்க உரிமையளித்தனர்.